பச்சிளம் குழந்தையின் விரலை கத்தரித்த செவிலியர். அரசு மருத்துவமனையில் அலட்சியம்!

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் கட்டைவிரலை வெட்டிய செவிலியர். பிறந்து 6 நாளான பச்சிளம் குழந்தைக்கு கையில் குளுக்கோஸ் மற்றும் மருந்து செலுத்துவதற்கு போடப்பட்ட ஊசியை மாற்றும் போது கட்டைவிரலை துண்டித்த தெனாவெட்டு செவிலியர்.
வேலூர் முள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர்கள் விமல்ராஜ் (30), நிவேதா (24) தம்பதியினர். நிறைமாத கர்ப்பிணியான நிவேதாவிற்கு கடந்த 24 ஆம் தேதி வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் குழந்தையின் கையில் குளுக்கோஸ் ஏற்ற இருந்த ஊசியை செவிலியர்கள் மாற்றுவதற்காக குழந்தையின் வலது கையில் ஒட்டப்பட்டு இருந்த டேப்பை கைகளினால் பிரித்து எடுக்காமல் கத்தரிக்கோலை பயன்படுத்தி அகற்றும் போது எதிர்பாராத விதமாக குழந்தையின் வலது கை கட்டைவிரல் துண்டாகியது.
இதனையடுத்து வேலூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் குழந்தையின் கையில் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை செய்வதற்காக உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் வேலூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து செவிலியர் அருணாதேவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்