பனைத் தொழிலாளர்களிடம் காவல் துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத் தொழில் சிறந்து விளங்கும் – எர்ணாவூர் நாராயணன்

தமிழகத்தில் பனைத் தொழிலாளர்களிடம் காவல் துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத் தொழில் சிறந்து விளங்கும் என தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் பனைத் தொழிலாளர்கள் பாதுகாப்பு மாநாடு குறித்து தென் மண்டல சமத்துவ மக்கள் கழகம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பனை தொழில் ஆர்வலர்கள், பனைத் தொழிலாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டமானது நேற்று (26:05:25) மாலை 4 மணியளவில் தூத்துக்குடி விவிடி ரோட்டில் அமைந்துள்ள எஸ்.டி.ஆர். ஹோட்டலில் வைத்து பத்திரிகையாளர் சந்திப்பு தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமை வகித்தார்.
ஆலோசனைக் கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பனை மரத் தொழிலாளர் நலவாரியத் தலைவராக பதவியேற்று, நான்கு ஆண்டுகள் ஆகின்றன. முதல் ஆண்டில் நல வாரியத்தில் 15 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். 2 ஆம் ஆண்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 3 ஆம் ஆண்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஒரு கோடி பனை விதைகள் நடவு செய்து சாதனை படைக்கப்பட்டது.
தற்போது 4ஆம் ஆண்டில் பனை மரத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், ராமநாதபுரத்தில் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மாநாடு நடத்தப்படவுள்ளது. இதில், பனைத் தொழிலாளர்கள் பிரச்னைகள் அனைத்தும் விவாதிக்கப்படும். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணத்திற்கு பின்னர், பனை மரத் தொழிலாளர்கள் மீது காவல் துறையினர் கடும் நெருக்கடி கொடுக்கின்றனர்.
ஏற்கெனவே பனைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், காவல் துறையினரின் நெருக்கடியால் தொழிலாளர்கள் பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இது குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.
இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கவுள்ளார். மாநாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை மரத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள உள்ளனர். 2026 பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடருவோம். தேர்தல் நேரத்தில் எத்தனை இடங்கள் என்பது குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.
இக்கூட்டத்தில், சமத்துவ மக்கள் கழக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், மாநில துணைச் செயலாளர் காமராசர், தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், கலை இலக்கிய அணிச் செயலர் அந்தோணி பிச்சை, மாநில பொதுச் செயலாளர் சூலூர் சந்திரசேகரன், பொருளாளர் கண்ணன், நாடார் பேரவை மாவட்ட தலைவர்கள் அருண் சுரேஷ்குமார், பரமசிவன், மாவட்ட செயலாளர் டேனியல்ராஜ், மாவட்டப் பொருளாளர் சுப்பையா உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் விஜய்