பிரபல இலக்கிய பேச்சாளர் ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 77.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நெல்லை கண்ணன், காங்கிரஸ் கட்சியில் பேச்சாளராக திகழ்ந்தார். தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர், ஆன்மிக சொற்பொழிவாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருநெல்வேலி டவுன் அம்மன் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த அவர் இன்று (ஆக.,18) உடல்நலக் குறைவு மற்றும் வயது முதிர்வின் காரணமாக காலமானார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சிறந்த பேச்சாளரான நெல்லை கண்ணன், பட்டிமன்ற நடுவராகவும் இருந்துள்ளார். குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றிவர். தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதை சமீபத்தில் பெற்றிருந்தார். தமிழக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 2020ல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான முஸ்லிம் அமைப்பு மாநாட்டில் பேசிய அவர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்த சர்ச்சை கருத்தை பேசியதற்காக சிறை சென்றிருக்கிறார்.
