பெற்றோர்கள் சண்டையால் நிகழ்ந்த விபரீதம் – பயத்தில் வீட்டிற்குள் ஓடிய போது அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு..

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தண்டலம் அருகே பெற்றோர்கள் சண்டையிட்டபோது அச்சமடைந்த 7 வயது சிறுவன் வீட்டிற்குள் ஓடிய போது எதிர்பாராத விதமாக கீழே கிடந்த மின்கம்பியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தண்டலம் கிராமத்தில் வசித்து வரும் தம்பதி துளசி-கஸ்தூரி. இவர்களுக்கு திருமணமாகி இரு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ள நிலையில், தந்தை துளசி அவ்வப்போது மது அருந்திவிட்டு வீட்டில் தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில் நேற்று நள்ளிரவு பெற்றோர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. இதனால் அச்சமடைந்த 7 வயது சிறுவன் மணிகண்டன் திடீரென வீட்டிற்குள் ஓடிய போது, எதிர்பாராத விதமாக கீழே அருந்து கிடந்த மின் ஒயரை மிதித்துள்ளார்.
உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே கீழே விழுந்த சிறுவனை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுவனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.