பேரணாம்பட்டு நகராட்சி கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு: உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையர் வேலவனுக்கு பொதுமக்கள் பாராட்டு!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 19 -வது வார்டில் கடந்த ஒரு வாரமாக கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு வீதி எல்லாம் கழிவுநீர் வெளியேறி பொதுமக்களுக்கு கடும் இன்னலை கொடுத்து வந்தது.
இதையறிந்த பேரணாம்பட்டு நகராட்சி ஆணையர் வேலவனும், பேரணாம்பட்டு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் உமாசங்கரும் அடைப்பு ஏற்பட்ட கழிவுநீர் கால்வாய்களை பார்வையிட்டு அடைப்பை சரிசெய்திட தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இறுதியாக நேற்றுமுன்தினம் அடைப்பு ஏற்பட்ட கால்வாய் கழிவு நீரை மின் மோட்டார்கள் மூலமாக வெளியேற்றி பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தினர்.
இதுகுறித்து விடுமுறை நாளான நேற்று கூட ஓய்வில்லாமல் பொது மக்களின் நலன் கருதி பணியாற்றிய நகராட்சி ஆணையர் வேலவனுக்கு 19வது வார்டு பொதுமக்கள் வாழ்த்துக் கூறினர்.
வேலை நாட்களிலேயே சீக்கிரமாக வீட்டுக்கு கிளம்பிவிடும் அதிகாரிகள் மத்தியில் விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமையில் கூட பொது மக்களின் நலன் கருதி ஓய்வு இல்லாமல் உழைத்து வரும் பேரணாம்பட்டு நகராட்சி ஆணையர் வேலவனுக்கு 19வது வார்டு பொதுமக்கள் தங்களது நன்றியை மனமாற தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த நகராட்சி ஆணையர் வேலவன் எனது கடமையை நான் தொய்வு இல்லாமல் செய்து வருகிறேன்.
இதனால் எனக்கு மனநிறைவு ஏற்படுகிறது. நான் மக்கள் பணியை மகேசன் பணியாக செய்து வருகிறேன் என தெரிவித்துக் கொள்கிறேன் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இது போன்ற அரசு அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு நகராட்சி ஆணையர் வேலவன் ஒரு உதாரணமாவார்.