பேருந்து வசதி கேட்டு, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூரிலிருந்து பொட்டுவாச்சாவடி கிராமத்துக்கு பேருந்து வசதி கேட்டு, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு ஊராட்சிக்குட்பட்டது பொட்டுவாச்சாவடி. இந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர் என சுமார் 100 பேர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தங்களது கிராமத்துக்கு அரசு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என மனு அளித்தனர்.
கிராம மக்கள் அளித்த மனுவில் பொட்டுவாச்சாவடி கிராமத்தில் சுமார் 1,500 பேர் வசித்து வருகிறோம். எங்களது கிராமத்திலிருந்து பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனம், அரசுப் பணிகளுக்கும்,
அன்றாடம் வேலைக்கு செல்ல 8 கி.மீட்டர் தூரமுள்ள தஞ்சாவூருக்கு வர வேண்டியிருப்பதால், பேருந்து வசதி இல்லாமல் சிரமப்படுவதால் எங்களது கிராமத்துக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.
மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கிய கிராம மக்கள், பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.