BREAKING NEWS

பொங்கல் விழா தவமிருக்கும் தஞ்சை கிராமம்.

பொங்கல் விழா தவமிருக்கும் தஞ்சை கிராமம்.

தஞ்சாவூர் மாவட்டம்,

விவசாயிகள் தாங்கள் விளைவித்து அறுவடை செய்த அரிசியில் முதன் முதலில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்தும், விவசாய பணிகளுக்கு உறுதுணையாக இருந்து உழைக்கும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் காலம் காலமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் பொங்கல் பண்டிகை மூன்று நாள்கள் கொண்டாடப்படுவது அந்த மண்ணின் தனி சிறப்புகளில் ஒன்றாக தொடர்ந்து வருகிறது.

 

 

காணும் பொங்கல் என சொல்லப்படுகிற மூன்றாம் நாளில் கொண்டாடப்படும் உழவர் திருநாளில் தஞ்சையை சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் முதல் மாடு அவிழ்க்கும் விழா ரொம்பவே பிரபலம். ஒரு வீட்டில் முதல் மாடும் அவிழ்க்கும் நிகழ்வு வந்து விட்டால் அடுத்து அந்த வீட்டிற்கு வர 200 வருடங்களுக்கு மேல் ஆகும். பாரம் பர்யமான அந்த விழாவை வாழ் நாள் தவமாக கருதி சுமார் ரூ 5 லட்சம் வரை செலவு செய்து வருடா வருடம் விழா எடுத்து வருகின்றனர் தஞ்சை அருகே உள்ள வேங்கராயன் குடிக்காடு கிராமத்தினர்.

 

இது குறித்து கிராம வாசிகள் சிலரிடம் பேசினோம், பொங்கல் வந்துட்டாலே எங்க ஊர் பெருசுகள் முதல் சிறுசுகள் வரைக்கும் உற்சாகம் களைக்கட்டத் தொடங்கி விடும். எங்க ஊர்ல நடக்குற முதல் மாடு அவிழ்க்கிற நிகழ்வினை சுத்துப்பட்டில் உள்ள கிராம மக்கள் ஆச்சர்யம் பொங்க பேசுவார்கள். இதை பாக்க வண்டி மாடு கட்டிக்கிட்டு ஊரின் மையப்பகுதியில் உள்ள வில்லாயி அம்மன் கோயிலுக்கு அன்னைக்கு வந்துடுவாங்க என உற்சாகமாக பேசத் தொடங்கினர்.

 

 

பொங்கல் அன்னைக்கு எல்லோர் வீட்டு வாசலிலும் பனை மட்டை அல்லது கீற்று கொண்டு நரச்ச (மறைவடம்) அமைச்சு வீட்டின் முன் பகுதியில் குழி எடுத்து அடுப்பு அமைப்போம். ஊரில் உள்ள விஷ்வகர்மா (ஆசாரி) சமூகத்தை சேர்ந்தவங்க தங்களுக்குள் குறிப்பிட்ட வீடுகளை பிரித்து எடுத்து கொண்டு தேங்காய் கொட்டாங்குச்சி மூடியில், மூங்கில் பிளாச்சில் கைப்பிடி வைத்து செய்யப்பட்ட அகப்பை (கரண்டி) வீட்டுக்கு இரண்டு வீதம் கொடுப்பார்கள்.

 

அந்த காலத்தில் பானையில் தான் பொங்கல் வைப்போம் பித்தளை மற்றும் சிலவர் கரண்டியை பயன்படுத்தினால் பானை உடைஞ்சுடும் அதனை தடுக்க ஏற்பட்ட அகப்பை கொடுக்குற பழக்கம் 200 வருஷத்துக்கு மேலாக தொடருது.
எங்க ஊர் வில்லாயி அம்மன் கோயில் பூசாரி திருநாவுக்கரசு ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் வந்து மணி அடிச்சு சங்கினால் ஊதிக் கொண்டே செல்வார்.அதன் பிறகு ஊரே ஒரே நேரத்தில் பொங்கல் வைப்போம்.

 

 

பொங்க பானை பொங்கி வர்ற வரைக்கும் குடும்பமே உட்கார்ந்து அடுப்பெரிக்கும் முதலில் சர்க்கரை பொங்கல் பானை தான் பொங்கி வரனும் அப்பதான் எல்லாம் இனிப்பா இருக்கும். அதற்கு ஏற்றார் போல் அடுப்பு எரிப்பார்கள். பானை பொங்குற நேரத்துல பொங்கலோ பொங்கல் என ஊருக்கே கேக்குற மாதிரி கத்துவோம்.

 

பின்னர் அகப்பை கொடுத்தவர்கள்,பூசாரி,விவசாய தொழிலாளர்கள் என வரிசையாக ஒவ்வொறு வீட்டுக்கும் வருவாங்க வெற்றிலை பாக்கு, அரிசி,தேங்காய், பழம், கரும்பு கொடுத்து அவங்களுக்கு மரியாதை செய்வோம். இதனை தொடர்ந்து நல்ல நேரம் பார்த்து ஒரே நேரத்தில் ஊரே அவரவர் வீட்டு வாசலில் படையலிட்டு பொங்கலோ பொங்கல்னு கூவி சூரியனுக்கு நன்றி சொல்வோம்.

 

இரண்டாம் நாளான மாட்டுப்பொங்கல் அன்னைக்கு அவரவர் வீட்டில் உள்ள கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்கள்.அன்று மாலை ஊர் பொதுகுளமான காசாங்குளத்திற்கு வருவார்கள். கிராம முக்கியஸ்தர்கள் தப்பாட்ட கலைஞர்களுடன் வந்து முதல் மாடும் அவிழ்க்கும் வீட்டை சேர்ந்த மாடு முதலில் குளத்தில் இறங்கி குளிக்க வைப்பார்கள் அதன் பிறகு மற்ற வீட்டு மாடுகளை குளிக்க வைப்பாங்க.

 

 

மாடுகள் வீட்டுக்கு வரும் போது உலக்கையினை தெருவில் போட்டு அதனை தாண்ட வைத்து அழைத்து செல்வோம். மாடுகளுக்கு மாலை அணிவிச்சு மரியாதை செய்வோம் பின்னர் உப்பில்லாமல் பொங்கல் வைச்சு படைச்சு மாடு உள்ளிட்ட கால் நடைகளுக்கு எங்க வீட்டு பிள்ளையக எண்ணி ஊட்டி விடுவோம்.மண் சட்டியில் பொங்கல் வைத்த அடுப்பிலேயே நெருப்பு எடுத்து நெல்,மிளகாய் போட்டு மாடுகளை நிற்க வைத்து திருஷ்டி சுத்தி தெரு முச்சந்தியில் சட்டியை உடைப்போம்.

 

ஓய்வில்லாமல் உழைக்கும் கால் நடைகளின் திருஷ்டியை எடுப்பதற்காகவும்,  எந்த கெட்ட சக்தியும் மாடுகளை அண்டாமல் இருக்கவும் இதனை செய்கிறோம். மூன்றாம் நாள் தான் பொங்கல் விழாவில் முத்தாய்ப்பாக எங்க முன்னோர்கள் காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது.

 

ஒவ்வொரு வருடமும் ஒரு வீட்டில் முதல் மாடு அவிழ்ப்பார்கள் அதன் பின்னரே அடுத்தடுத்த வீடுகளுக்கு சென்று மாடுகள் அவிழ்க்கும் பழக்கம் பல நூறு வருஷங்களாக எங்க ஊரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முதல் மாடு விழ்க்கும் வீட்டில் பெரிய பந்தல் அமைச்சு வாழை, தோரணம் எல்லாம் கட்டுவார்க. ஊர் முழுக்க ரேடியோ கட்டி விவாசயத்தை போற்றக்கூடிய பாடல்கள் போடுவாங்க. 

 

சொந்த பந்தங்களுக்கு சொல்லி அழைப்பாங்க.முக்கியமாக கல்யாணமாகி வெளியூருக்கு சென்ற ஊரில் பொறந்த பொண்ணுங்களுக்கு சொல்லுவார்கள். திருமணம் உள்ளிட்ட சுக நிகழ்ச்சிகளுக்கு எடுப்பது போல் அந்த வீட்டில் பொறந்த பொண்ணுங்க மற்றும் முக்கிய சொந்தங்கள் முதல் மாடு அவிழ்க்கும் வீட்டிற்கு தாரை தப்பட்டை முழங்க பழங்கள், காய்கள்ரிகள், பித்தளை பத்திரங்களுடன் வரிசை எடுத்து செல்வார்கள்.

 

 

வரிசை எடுத்து வந்த அனைவருக்கும் முதல் மாடும் அவிழ்க்கும் வீட்டை சேர்ந்தவர்கள் நெற்றியில் திலகமிட்டு வரவேற்று மரியாதை செய்வார்கள்.அந்த இரண்டு நாள்களும் ஊரையே கூட்டி சைவ,அசைவ விருந்து வைப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மாடுகளையும் குளிக்க வச்ச பின்னர் அதன் கொம்புகளை சீவி வண்ண சாயம் பூசுவார்கள். கழுத்தில் செண்டிப்பூ கோக்கப்பட்ட மாலை மற்றும் பேப்பரில் செய்யப்பட்ட வண்ண மாலையினை சூட்டுவார்கள்.

 

மதியம் மூன்று மணியளவில் வில்லாயி அம்மன் கோயிலிலிருந்து கிராமத்தினர் முதல் மாடு அவிழ்க்கும் வீட்டிற்கு பறை இசை முழங்க ஊர்வலமாக செல்வோம். முதல் மாடு அவிழ்க்கும் வீட்டில் சந்தனம் கொடுத்து வரவேற்று எல்லோரையும் உட்கார வைத்து மரியாதை செய்வார்கள். விவசாயி என்பதை குறிக்க கூடிய பச்சை துண்டு அனைவருக்கும் போத்தி மரியாதை செய்யப்படும். அந்த வீடு மற்றும் பங்காளில் வீட்டில் பெண்ணெடுத்த மாப்பிள்ளைகளுக்கு கிராமத்தினர் முன்னிலையில் மரியாதை செய்யப்படும்.

 

இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டினை அந்த வீட்டை சேர்ந்தவர்கள் பிடித்துக்கொண்டு தயார் நிலையில் இருப்பார்கள். சாமி கும்பிடுவது உள்ளிட்ட சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு அந்த வீட்டு தெருவில் செதரு தேங்காய் உடைச்ச பின்னர் வாசலில் போடப்பட்ட உலக்கையினை தாண்ட வைத்து முதல் மாட்டை அவிழ்த்து அழைத்து செல்வார்கள். அதன் பிறகு கிராமத்தினர் ஒவ்வொரு வீடாக சென்று தேங்காய் உடைச்சு அந்த வீட்டில் உள்ள மாட்டினை அழைப்பார்கள்.

 

 

முதல் மாடும் அவிழ்க்கும் வீட்டின் மாடு முன்னே வர அதனை தொடர்ந்து மற்ற மாடுகள் ஊர்வலமாக வரும். தாரை, தப்பட்டை முழங்க கரகம் உள்ளிட்ட பாரம்பர்ய கலைஞர்கள் ஆடிக்கொண்டு வான வேடிக்கையுடன் மாடுகளை அழைத்து செல்வார்கள். சாலையின் ரெண்டு பக்கமும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என கூடியிருப்பர். இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் விசிலடித்து கொண்டு முன்னே செல்வார்கள்.

 

மாடுகள் வில்லாயி அம்மன் கோயிலை சென்றடைந்த பிறகு அங்கு பூஜைகள் நடைபெற்று மாடுகளுக்கு தீபாரதணை காட்டப்படும். பின்னர் மீண்டும் அதனை தாண்டியுள்ள வீடுகளில் தேங்காய் உடைத்தபடியே மந்தை கூடும் இடத்திற்கு செல்வோம். முதல் மாடு அவிழ்க்கும் வீட்டை சேர்ந்த பெண் பித்தளை குடத்தில் ஊர்வலத்தின் பின்னாலேயே தண்ணீர் எடுத்து வருவார். அந்த தண்ணீரை மந்தையில் கூடியுள்ள மாடுகள் மேல் தெளித்து கற்பூரம் காட்டுவர்கள். அதன் பின்னர் மந்தையில் நிற்கும் மாடுகளை விரட்டி விடுவோம்.

 

 

புலி பாய்ச்சலில் ஓடும் மாடுகள் தன் எஜமானிகள் இல்லாமலே தங்கள் வீடுகளை சென்று சேர்ந்துடும். இந்த விழாவிற்கு பல ஊர்களை சேர்ந்த ஆயிரகணக்கானவர்கள் வருவாங்க. ஆடு, மாடு, கோழி என பலரும் பலவற்றை நேர்த்திகடனுக்க்காக செலுத்துவார்கள். அடுத்த நாள் அதனை கிராம பெரியோர்கள் முன்னிலையில் ஏலம் விடுவோம்.

 

வரவு செலவு கணக்கு பார்த்த பிறகு சிறப்பு பூஜைகள் செய்து அடுத்த வருடம் யார் வீடு முதல் மாடு அவிழ்க்க இருக்கிறதோ அந்த வீட்டை சேர்ந்தவரை அழைத்து தேங்காய் பழம் கொடுத்து அடுத்த வருஷத்துக்கு தயாராகுங்கன்னு சொல்லிடுவோம். முதல் மாடு அவிழ்க்கும் வீட்டில் எப்படியும் ரூ 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை செலவாகும்.

 

மாடு இல்லாதவர்கள் கூட அந்த சமயத்தில் இதற்காக மாடு வாங்கி விடுவார்கள்.சுத்துப்பட்டு கிராமத்தில் இதே போன்று முதல் மாடு அவிழ்க்கும் விழா நடைபெறுகிறது. ஆனால் ஊருக்கு மூன்று பேர் அல்லது தெருவுக்கு ரெண்டு பேர் வீதம் மாடு அவிழ்ப்பார்கள். சில ஊர்களில் பொங்கல் சமயத்தில் கிராமத்தில் உள்ள எல்லோரது பெயர்களையும் எழுதி போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தும் இதனை நடத்துகின்றனர்.

 

 

எங்க ஊர்ல வழி வழியாக வரிசைப்படி எந்த குழப்பமும் இல்லாமல் வருடம் ஒரு வீடு என தேர்ந்தெடுத்து இதனை நடத்தி வருகிறோம்.ஒரு முறை ஒரு வீட்டுக்கு வந்து விட்டால் அடுத்து வருவதற்கு 200 வருடங்களுக்கு மேல் ஆகும். எங்க ஆயுசுக்கு இதை நடத்தவும், பாக்கவும் கொடுத்து வச்சிருக்கேனு இதனை தவமாக கருதி அதற்கான ஏற்பாட்டை செய்வது பல காலமாக தொடர்ந்து வருகிறது. விமர்சையாக நடத்த வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை அவரவர்கள் பொருளாதாரத்துக்கு ஏற்ப செலவு செய்து கொள்வார்கள் என்றனர்.

 

இப்ப தெற்கு தெரு பக்கம் உள்ள வீடுகளில் முதல் மாடு அவிழ்க்கப்பட்டு வருகிறது.வடக்கு தெருவுக்கு வர்றதுக்கு இன்னும் 50 வருஷம் ஆகும் என் மகனுக்கே இதை நடத்த கொடுத்து வைக்கல என் பேரப்புள்ளை நடத்துவான். முன்னோர்கள் நடத்திய இந்த விழாவினை விருப்பு, வெறுப்பு இல்லாம ஊரே கூடி நின்னு நடத்தி வருவதை என் சின்ன வயசுலே இருந்தே பார்த்து வருகிறேன். எங்க ஊரோட சிறப்பாகவும், அடையாளமாகவும் முதல் மாடு அவிழ்க்கும் விழா இருந்து வருவதாக வயதான பெரியவர் ஒருவர் உற்சாகம் குறையாமல் கூறினார்.

 

CATEGORIES
TAGS