போடிநாயக்கனூர் – தேனி அகல ரயில் 120 கி.மீ வேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம்,
மதுரை – போடிநாயக்கனூர் இடையே உள்ள 90.4 கி.மீ தூர மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு கடந்த 2011ஆம் ஆண்டு திட்டப்பணிகள் தொடங்கின. இதில் முதல் கட்டமாக மதுரையில் இருந்து தேனி வரை உள்ள 75 கிலோமீட்டர் தூரப் பணிகள் நிறைவுபெற்று 12 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மே 26 ஆம் தேதி முதல் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது தேனியில் இருந்து போடிநாயக்கனூர் வரை உள்ள 15 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில்வே பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து போடிநாயக்கனூர் – தேனி வரையில் இன்று ரயில் இன்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. விநாடிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் நடைபெற்ற இந்த சோதனை ஓட்டத்தில் போடிநாயக்கனூரில் இருந்து தேனிக்கு சுமார் 10நிமிடத்தில் வெற்றிகரமாக ரயில் இன்ஜின் வந்தடைந்தது.
இன்றைய அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டத்தை முன்னிட்டு தேனி முதல் போடி வரை உள்ள ரயில்வே வழித்தடங்களின் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் ரயில் பாதையை கடக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
செய்தியாளர் மு .பிரதீப்