மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சையில் நாளை முப்பெரும் விழா.

தஞ்சாவூர்,
மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் 27 செப்டம்பர் உலக சுற்றுலா தினம், 16 செப்டம்பர் முதல் 30 செப்டம்பர் வரை தூய்மை விழிப்புணர்வு இயக்கம் (ஸ்வச்தா பக்வாடா) 27 செப்டம்பர் முதல் 2 அக்டோபர் வரை 75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா வாரம் ஆகியவற்றை கொண்டாடும் வகையில் தஞ்சையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது
27ம் தேதி காலை 8 மணிக்கு தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு தஞ்சை பெரிய கோவில் வளாகத்திலிருந்து அரண்மனை வளாகம் வரை கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து காலை 10:30 மணிக்கு தஞ்சை அரண்மனை வளாகம் மராட்டா தர்பார் மண்டபத்தில் மாணவ, மாணவிகளுக்கு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை செய்முறை விளக்கத்தினை தலையாட்டி பொம்மை கைவினைக் கலைஞர் மாரியம்மன் கோவில் திரு. பிரபு மற்றும் திருமதி. கலைச்செல்வி ஆகியோர் அளிக்கின்றனர்.
நாளை மாலை 4.30 மணிக்கு சிவகங்கை குளம், ஸ்வாட்ஸ் சர்ச், வீணை தயாரித்தல், கோட்டை சுவர் மற்றும் அகழி, தேர்முட்டி, தஞ்சை நால்வர் இல்லம், அய்யன் குளம், கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி வழியாக நெற்களஞ்சியம் வரை தொல்லியல் அறிஞர் திரு. செல்வராஜ் தலைமையில் பாரம்பரிய நடைபயணம் நடக்கிறது.
இவ்விழாவின் சிறப்பம்சமாக மாலை 6.00 மணிக்கு தஞ்சாவூர் பெரிய கோவில் வளாகத்தில் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைகளான கொம்பு, நையாண்டி மேளம், புலி ஆட்டம், கும்மி கோலாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம் கரகாட்டம், தேவராட்டம் பம்பை ஆட்டம், கட்டைக்கால் ஆட்டம், காளியாட்டம், தப்பாட்டம் சிலம்பாட்டம் மற்றும் துடும்பாட்டம் நடைபெறும் என இந்திய சுற்றுலா தென் மண்டல இயக்குனர் திரு. ஐ. முகமது பாருக் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் இந்தியாவில் அதிகப்படியான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக தமிழகம் உள்ளது என்றும் 2019 ஆண்டின் கணக்குப்படி 70 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், 49 கோடியே 50 லட்சம் உள்நாட்டு சுற்றுலா பணிகளும் தமிழகத்திற்கு வந்து சென்றுள்ளதாக தெரிவித்தார்.
2023ல் இதைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான பல்வேறு திட்டங்கள் சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவின் வளர்ச்சியில் 10% GDP சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கிறது என்றும், அன்னிய செலாவணியாக 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது எனவும், 8 கோடியே 75 லட்சம் பேர் சுற்றுலாத் துறை மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர் எனவும் தெரிவித்தார்.
இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் சுவதேஷ் தர்ஷன் திட்டம் மற்றும் பிரசாத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர், இந்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர், உதவி ஆணையர், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர், மாநகர மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
மேற்கண்ட முப்பெரும் விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது இந்திய சுற்றுலா தகவல் தொடர்பு அலுவலர் திரு ராஜ்குமார் மற்றும் இன்டாக் கௌரவ செயலாளர் திரு முத்துக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.