மூணாறில் அச்சுறுத்தி வந்த அரிசிகொம்பன் யானை நடமாடுவதால் சுற்றுலா பயணிகள் சென்று வருவதற்கு வனத்துறையினர் தடை.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஹைவேஸ் மேகமலை வனப்பகுதி அமைந்துள்ளது. தேயிலைத் தோட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதியில் ஏழுமலை கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.
மேலும் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தளமாக உள்ள இந்த பகுதிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம் .
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்ன கானல் மற்றும் சாந்தாம்பாறை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரிசிகொம்பன் என பெயரிட்டு சுமார் 20 பேரின் உயிரை பலி வாங்கி வேளாண் பயிர்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து சேதப்படுத்தி வந்த காட்டு யானையினண கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகளின் உதவியோடு பிடித்து தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேதக்காணம் வனப்பகுதியில் விட்டனர்.
தமிழக கேரள மாநில எல்லையான இந்த பகுதியில் யானையை விடும் முன்பு அதன் கழுத்தில் ரேடியோ காலர் என்ற கருவி பொருத்தப்பட்டது. இந்நிலையில் இந்த அரிசி கொம்பன் காட்டு யானை தேனி மாவட்டம் ஹைவேஸ் மேகமலை வன சரணாலய சுற்றுலா பகுதியில் இரவங்களாறு, மணலாறு தேயிலைத் தோட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து யானையின் மூலம் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித ஆபத்து வராத வகையில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் கோடை விடுமுறையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மேகமலை ஹைவேவிஸ் பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர் இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
அரிசிகொம்பன் யானையால் பெரிதும் விபத்துக்கள் ஏற்படும் என அப்பகுதி தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.
மேலும் அரிசி கொம்பனை கண்காணிப்பதற்காக மாவட்ட காவல் துறையின் சார்பில் கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.