ராஜபாளையம் அருகே குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள்.

ராஜபாளையம் அருகே குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை; மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சியின் 14 வது வார்டை சேர்ந்த கட்டபொம்மன் நகரில் 17 தெருக்கள் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யப்படும் குடிநீர் போதுமான அளவு கிடைப்பதில்லை. பெண்களுக்கு பொது சுகாதார வளாகம் இல்லாததால் திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது. இது குறித்து பல முறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர்.
எனவே பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் சாலை, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் இன்று பொது மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் பொது மக்கள் முழக்கமிட்டனர். பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், வெங்கட கோபு உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
குடிநீர் வழங்கவும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் எனவும் அவர்கள் அளித்த உறுதியை ஏற்றுக் கொண்ட மக்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.
ம.வெள்ளானைப்பாண்டியன் ராஜபாளையம்.