BREAKING NEWS

ராணிப்பேட்டை ஊராட்சிமன்ற பணிகளில் கணவரையோ, உறவினரையோ அனுமதிக்க கூடாது .!!

ராணிப்பேட்டை ஊராட்சிமன்ற பணிகளில் கணவரையோ, உறவினரையோ அனுமதிக்க கூடாது .!!

ஆட்சியர் ச.வளர்மதி அறிவுரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல் !!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற பணிகளில் கணவ ரையோ, உறவினரையோ அனுமதிக்கக்கூடாது என்று ஆட்சியர் வளர்மதி கண்டிப்பு!!

 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற பெண் தலைவர்களின் பொறுப்புகளும், கடமைகளும் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது.

 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 164 ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் பதவியில் இருந்து வருகின்றனர். இவர்களுக்கான பொறுப்புகளும், கடமை களும் என்ன என்பதை தெரிந்து கிராம வளர்ச்சிக்கு ஒவ்வொரு பெண் தலைவர்களும் தங்களை ஈடுபடுத்தி பணியாற்ற வேண்டும். பெரும்பான்மையான இடங்களில் பெண் தலைவர்களின் உறவினர்களே நிர்வாகத்தில் தலையிட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

 

கிராம ஊராட்சிகளில் பெண் தலைவர்கள் தான் அனைத்து வகையான வளர்ச்சி திட்டங்களிலும் பணியாற்ற வேண்டும். உங்களுடைய கணவரோ, உறவினரோ இருக்கக்கூடாது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால், உங்கள் ஊரில் அடிப்படை பிரச்சினைகளில் ஒன்றான குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்திற்கு அனைவரும் முன் வந்து செயலாற்ற வேண்டும்.

 

குப்பைகளை ஒவ்வொரு வீட்டிலும் தரம் பிரித்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் குப்பை கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் முறையாக பராமரிக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பெரும்பான்மை யான ஊராட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள் குப்பை கிடங்குகளை பயன்படுத்தப்படாமல் தெருவோரங்களில் அனைத்து வகையான குப்பைகளையும் கொட்டி எரித்து வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

 

ஊராட்சி மன்ற தலைவர்கள் இதை கவனிக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ‘ஜல்ஜீவன் மிஷன்’ திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு தொகை பல்வேறு ஊராட்சிகளில் இன்னும் நிலுவையில் உள்ளது.அதை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.

CATEGORIES
TAGS