வானகிரி மீனவ கிராமத்தில் சர்வதேச வெப்ப மண்டல தின விழிப்புணர்வு பேரணி-பயிற்சி முகாம்-மாணவர்கள்,கிராம மக்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகேயுள்ள வானகிரி மீனவ கிராமத்தில் சர்வதேச வெப்ப மண்டல தினம் நியூஸ் தொண்டு அமைப்பு(கொல்கத்தா) சார்பில் அமைப்பின் திட்ட மேலாளர் கெனி ஜே நியூபோர்ட் தலைமையில் நடைப்பெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின் பேரில் நியூஸ் (இயற்கை சுற்றுச்சூழல் வனவிலங்கு சங்கம்)என்கிற தொண்டு அமைப்பு சார்பில் கிரீன் டிஎன் மிஷன் திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்ட கடலோர பகுதிகளில் சதுப்பு நிலக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக வானகிரி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள்,பொதுமக்கள் இடையே அலையாத்தி காடுகள் வளர்ப்பின் அவசியம் குறித்தும், அலையாத்தி காடுகள் சந்திக்கும் ஆபத்துக்கள் குறித்தும், அலையாத்தி காடுகளால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நடைப்பெற்ற சிறப்பு பயிற்சி முகாமில் ,மாணவர்கள், கிராம பொதுமக்கள்,பெண்கள் கலந்துக்கொண்டனர்.
பயிற்சி முகாமை தொடர்ந்து சதுப்பு நில காடுகளின் பாதுகாப்பை வலியுறுத்தியும், காடுகளால் ஏற்படும் நன்மைகளை வலியுறுத்தியும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக்கொண்டு மாணவர்கள் ,பெண்கள் ,பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பியவாறு பள்ளி வளாகத்திலிருந்து கடற்கரை நோக்கி முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்றனர்.
தொடர்ந்து அலையாத்தி காடுகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பலகையை நியூஸ் அமைப்பினர் முன்னிலையில் மீனவ பஞ்சாயத்தார் திறந்து வைத்தார். 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ,கிராமபொதுமக்கள் ,வானவில் மகளிர் சுய உதவி குழு பெண்கள் ஆர்முடன் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.