வெள்ளரி வெள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வெள்ளரி வெள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட்டன.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வெள்ளரி வெள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 430-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக கலைத் திருவிழா போட்டிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி, நவம்பர் 25ஆம் தேதி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் மற்றும் துணை தலைமை ஆசிரியர் ராமு கருப்பணன் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தட்சணாமூர்த்தி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். அப்போது பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர், இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், அடுத்தக்கட்டமாக வட்டார அளவிலான போட்டிகளிலும், மாவட்ட அளவிலான போட்டிகளிலும் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதற்காக மாணவர்களை தயார்படுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”1985ஆம் ஆண்டு இப்பள்ளியில் படித்த முன்னால் மாணவர்கள் அசோசியேசன் சார்பாக சுமார் ரூ.5 லட்சம் மதிப்பில் பள்ளிக் கட்டிடங்களுக்கு பெயிண்டிங் செய்து கொடுத்துள்ளனர். மேலும், மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் ரூ.1.20 லட்சம் மதிப்பில் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
இவை அனைத்திற்கு நன்றி” என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தட்சணாமூர்த்தி, ”தன்னுடைய கோரிக்கையை ஏற்று இப்பள்ளிக்கு புதிதாக ஆய்வகம் (Lab), டேபிள்-சேர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த பள்ளிக்கல்வித்துறைக்கு நன்றி” தெரிவித்தார்.