வேலூர் ஜவான்ஸ் பவன் அருகில் குப்பை மேட்டில் டிஜிட்டல் பேனருக்கு பயன்படுத்தும் ஃபிரேம்கள் அடுக்கி வைத்துள்ள அவலம்!

வேலூர் மாநகராட்சி 60 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு மாநகராட்சி வளர்ச்சி பாதையில் செல்கிறதோ இல்லையோ சில கட்சி பிரமுகர்களும், அடையாளம் தெரியாத சில ரௌடிகள் மற்றும் தன்னை கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர் என்பதை வெளியில் பறைசாற்றும் வகையிலும் டிஜிட்டல் பேனர்களை தாறுமாறாக மாநகரம் முழுவதும் வைத்து நாற்றமெடுக்க வைக்கின்றனர்.
இதனை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதே இல்லை. மாநகராட்சியில் முன் அனுமதியின்றி வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களை உடனடியாக காவல்துறையிடம் சொல்லி அப்புறப்படுத்துவதில் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டுவதே இல்லை.
அது ஏதோ எருமை மீது மழை பெய்தது போல கண்டும் காணாமல் விட்டு விடுவதால் தேவையற்ற நபர்கள், விஷமிகள், ரவுடிகள், தாதாக்கள், அடையாளம் தெரியாதவர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள இதுபோன்ற பேனர்களை பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வருகின்றனர்.
இதனால் ஒரு கணிசமான தொகையும் பொதுமக்களிடமிருந்து பறிப்பதையும் வழக்கமாக ஆக்கிக் கொண்டுள்ளனர். இப்படி தங்களுக்கு பிறந்தநாள், நினைவு நாள், திருமண நாள் என்று அவர்களது வீட்டில் கல்யாணமா, கருமாதியோ என்று எது என்று தெரியாமல் அனைத்திற்கும் பேனர் வைத்து புலகாங்கிதம் அடைகின்றனர்.
இது நாளடைவில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக அவர்களது மனதில் நீங்காத இடம் பிடித்து விடுகின்றனர் இது போன்ற நபர்கள் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை.
இப்படி அடையாளம் தெரியாதவர்கள் வைக்கும் பேனரை கூட அப்புறப்படுத்தாமல் காவல்துறையும், மாநகராட்சி நிர்வாகமும் கைகட்டி வேடிக்கை பார்த்து வருவது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்களை கண்டு காவல் துறையும், வேலூர் மாநகராட்சி நிர்வாகமும் நடுங்குவது ஏன் என்று தெரியவில்லை. சட்டம் போட்டு தடுக்க பார்க்கிறது அரசு, அதை திட்டம் போட்டு திருடப் பார்க்கிறது இது போன்ற சமூக விரோத கூட்டம் ஆக மொத்தத்தில் அரசு கண்டுகொள்ளாததால் இது போன்ற சமூக விரோதிகளும் இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தங்களது வளர்ச்சியை துரித கதியில் காண்பதற்கு முனைப்புடன் செயல்படுகின்றனர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவர்கள் வேகம் காட்டுகின்றனர் என்றே கூறலாம். இனிவரும் காலங்களில் இது போன்ற பேனர் வைப்பவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையோ அல்லது பேனர்களை கைப்பற்றியோ காவல்துறையும், வேலூர் மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து ஒரு அதிரடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது வேலூர் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாழும் பொதுமக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளாக மாறி உள்ளது.
இதை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் பின்பற்றச் செய்வாரா ? அல்லது வேலூர் மாநகராட்சி நிர்வாகம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விட்டுவிடுவாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
குறிப்பாக வேலூர் ஜவான்ஸ் பவன் அருகிலும், பிஎஸ்என்எல் அலுவலகம் அருகிலும் இந்த டிஜிட்டல் பேனருக்கு பயன்படுத்தக்கூடிய ஃபிரேம்களை ஆங்காங்கே குப்பைகளில் அடுக்கி வைத்துள்ளனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் இதில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன.
குறிப்பாக சில சமூகவிரோதிகள் அதில் சிறுநீர் கழிப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளது வெட்கக்கேடாக மாறி உள்ளது.
இதையும் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் கண்டறிந்து அவற்றை கைப்பற்றி நடவடிக்கை எடுத்தால் பொதுமக்களுக்கு நலம் பயக்கும். ஆக மொத்தத்தில் வேலூர் மாநகரில் பேனர் கலாச்சாரம் அடியோடு ஒழியுமா? அல்லது வீறு கொண்டு எழுந்து வளர்ச்சியை காணுமா? என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அதுவரை நாம் பொறுத்திருப்போம்.
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்