BREAKING NEWS

ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தலைமை ஏற்கனும்..ராஜகண்ணப்பன் பற்ற வைத்த தீப்பொறி! சைலன்ட் உதயநிதி.!

ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தலைமை ஏற்கனும்..ராஜகண்ணப்பன் பற்ற வைத்த தீப்பொறி! சைலன்ட் உதயநிதி.!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் தான் தமிழகத்திற்கு தலைமை ஏற்று வழிநடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.

 

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என திமுக ஆட்சியமைத்ததிலிருந்தே அந்தக் கட்சிக்குள் அரசல் புரசலாகப் பேசப்பட்டுவருகிறது. ஆரம்பத்தில் இந்தப் பேச்சு எழுந்தபோதே திமுகவின் சுற்றுச்சூழல் அணி சார்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டு ஓராண்டாகியிருக்கும் நிலையில், தற்போது பல்வேறு அமைச்சர்களும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றிவருகிறார்கள்.

அந்த வகையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் செயற்குழுக் கூட்டம் மே 30-ம் தேதி நடைபெற்றது. அதில் ஜூன் 3-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை மாவட்ட அலுவலகத்தில் கட்சிக் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

 

கூட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் எனவும் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இங்கு மட்டுமல்ல, திண்டுக்கல் திமுக கிழக்கு, மேற்கு மாவட்டங்களின் சார்பாகத் திண்டுக்கல் கலைஞர் அரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடந்த செயற்குழுக் கூட்டத்திலும், ஜூன் 3-ம் தேதி முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளைக் கொண்டாடுவது குறித்த தீர்மானத்தோடு திமுக மாநில இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

உதயநிதி அமைச்சராக வேண்டும் எனத் தொண்டர்கள் தொடங்கி அமைச்சர்கள்வரை பேசிவந்த நிலையில், தற்போது ஆங்காங்கே அதற்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், இப்படித் தீர்மானங்கள் நிறைவேற்றி தலைமைக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் இதேபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

 

சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி வில்லிங்டன் கல்லூரி விடுதி மாணவ மாணவிகளுக்கு திருத்தியமைக்கப்பட்ட உணவு பட்டியலின்படி புதிய உணவு வகைகளை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், ‘அண்ணா கருணாநிதி போன்ற தலைவர்கள் தோற்றுவித்த திமுகவை மு.க ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் வழிநடத்த வேண்டும்.

மு.க ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலினும் தமிழகத்திற்கு தலைமை ஏற்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை பார்த்ததாகவும், ஆனாலும் முதலமைச்சருக்கு பிறகு நீங்கள் தான் தமிழகத்தை வழிநடத்த வேண்டும் எனவும் மேடையிலேயே அமைச்சர் ராஜகண்ணப்பன், உதயநிதி ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார். அடுத்து பேசிய சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி பிறந்தநாளை மாணவ, மாணவிகளோடு கொண்டாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி எனவும் இந்த விடுதிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்’ என்று கூறினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )