
ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உயர்த்தப்பட்ட வரியை குறைத்து அரசாணை வெளியாகி 20 நாட்களுக்கு மேல் ஆகியும், இது வரை அரசாணையை அமல்படுத்தாமல் உயர்த்திய வரியை மக்களிடம் மிரட்டி வசூல் செய்வதாக குற்றம் சாட்டி, வரி உயர்வு எதிர்ப்பு குழுவினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களுக்கு தமிழகத்திலேயே அதிகமான வரி உயர்வு செய்யப்பட்டிருந்தது. இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து 5 முதல் 25 சதவிகிதம் வரை வரியை குறைத்து கடந்த 31 ம் தேதி அரசாணை வழங்கப்பட்டது.
இந்த அரசாணை வெளியிடப்பட்டு 20 நாட்களாகியும் இது வரை அரசாணையை அமல் படுத்தாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக பொது மக்கள் சார்பில் புகார் கூறப்பட்டு வருகிறது. மேலும் வரி குறைத்து அரசாணை வெளியாகியும், உயர்த்தப்பட்ட வரியை கட்ட வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் பொது மக்களை மிரட்டியும், கட்டாயப் படுத்தியும் வசூல் செய்வதாக கூறப்படுகிறது.
வரிஉயர்வை கண்டித்து நடைபெற இருந்த போராட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி நடந்த சமாதான கூட்டத்தில், நடப்பு சட்ட மன்ற கூட்டத்தில் நகராட்சியின் அடிப்படை வரி விகிதத்தை குறைக்க கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற எம்எல்ஏ தங்கப் பாண்டியன் அளித்த வாக்குறுதியும் இது வரை நிறைவேற்றப்படவில்லை.
எனவே வரி குறைப்பு செய்த அரசாணையை அமல்படுத்தாமல் அலட்சியம் செய்வது குறித்து வரி உயர்வு எதிர்ப்பு குழுவினர் நகராட்சி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அதிகாரிகள் முறையான பதில் அளிக்காததால் வரி உயர்வு எதிர்ப்பு குழுவினருக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. விரைவில் அரசாணையை அமல் படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொது மக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளதாக வரி உயர்வு எதிர்ப்பு குழுவினர் அறிவித்துள்ளனர்.
ம.வெள்ளானைப்பாண்டியன் ராஜபாளையம்.