தலைப்பு செய்திகள்
“அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக ஆவின் பால் விநியோகத்தில் பிரச்சினை, அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் 48ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப் போகும் ஆபத்து”!

சென்னை, அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் ஆவின் பாலானது பல்வேறு காரணங்களால் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து காலதாமதமாகவே விநியோகம் நடைபெற்று வந்த நிலையில் அம்பத்தூர் பால் பண்ணையில் பால் பேக்கிங் செய்யப்பட்டு வரும் பால் பாக்கெட்டுகளில் லீக்கேஜ் இருக்கிறதா..? என்பதை பரிசோதித்து, லீக்கேஜ் பால் பாக்கெட்டுகளை தனியே எடுத்து விட்டு நல்ல பால் பாக்கெட்டுகளை காலி பால் டப்புகளில் அடுக்கி ரூட் வண்டி என்று சொல்லக்கூடிய நுகர்வோர் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யும் வாகனங்கள் மற்றும் மொத்த விநியோகஸ்தர்கள் வாகனங்களில் ஏற்றும் பணிகளை செய்து வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த சில தினங்களாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த சில தினங்களாக லீக்கேஜ் ஆன பால் பாக்கெட்டுகள் அடங்கிய சுமார் 4ஆயிரம் பால் டப்புகள் (சுமார் 48ஆயிரம் லிட்டர் பால்) மறு சுழற்சி செய்ய முடியாமல் பால் பண்ணைக்குள் தேக்கமடைந்துள்ளதாகவும், அதன் காரணமாக காலி பால் டப்புகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டு அதன் காரணமாகவே பால் விநியோகம் மிகவும் காலதாமதம் ஆவதாக கூறப்படுகிறது.
மேலும் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் தேக்கமடைந்துள்ளதாக கூறப்படும் 4ஆயிரம் டப்புகளில் உள்ள சுமார் 48ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப் போய் ஆவினுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்பதால் ஆவின் அதிகாரிகள் தரப்பில் அந்த தகவல் அரசுக்கும், ஆவின் உயரதிகாரிகளுக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி தேக்கமடைந்துள்ள பாலினால் சுமார் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் டப்புகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தினசரி பால் பாக்கெட்டுகள் பேக்கிங் செய்து, அதனை அடுக்கி மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் பால் முகவர்களுக்கு விநியோகம் செய்ய மிகவும் காலதாமதம் ஆகிறது எனவும் சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக கடந்த சில தினங்களாக மிகவும் காலதாமதமாக பால் முகவர்களுக்கு ஆவின் பால் விநியோகம் செய்யப்படுவதாலும், தற்போது கோடை காலம் என்பதாலும் ஆவின் பால் விரைவில் கெட்டுப்போய் விடுகிறது. இதன் காரணமாக பால் முகவர்களும், நுகர்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும், பால்வளத்துறை அமைச்சர் அவர்களும் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் நிலவும் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கும், தட்டுப்பாடாக இருக்கும் காலி பிளாஸ்டிக் பால் டப்புகள் பிரச்சினைக்கும் தீர்வு காண்பதோடு, தற்போது அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் தேக்கமடைந்துள்ளதாக கூறப்படும் சுமார் 48ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப் போகும் சூழல் இருப்பதால் அதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அந்த இழப்பை அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும், கெட்டுப் போன ஆவின் பாலினால் இழப்பை சந்தித்து வருகின்ற பால் முகவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர்
சு.ஆ.பொன்னுசாமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
