BREAKING NEWS

கோவில்பட்டி அருகே காதல் திருமணம் செய்த தம்பதியரை பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை.

கோவில்பட்டி அருகே காதல் திருமணம் செய்த தம்பதியரை பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் ஆர்.சி தெருவை சேர்ந்தவர் முத்துக்குட்டி (50). இவரது மகள் ரேஸ்மா (20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான வடிவேல் மகன் மாணிக்கராஜ் (26) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவரது காதலுக்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் காதல் ஜோடி இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்னர் இருவரும் ஊருக்கு வந்துள்ளனர். இவர்களது திருமணத்திற்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தாராம். பின்னர் ஊர் பஞ்சாயத்து மூலம் பேசி அவர்கள் இருவரையும் தனிக்குடித்தனம் வைத்துள்ளனர். ஆனாலும் முத்துக்குட்டி மகள் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை ரேஷ்மா மற்றும் அவரது கணவர் மாணிக்கராஜாவும் வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த முத்துக்குட்டி இருவரையும் சராமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இருவரது உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக எட்டையாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து தப்பியோடிய முத்துக்குட்டியைத் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் அப்பகுதியை விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )