BREAKING NEWS

விளாத்திகுளத்தில், பிரபல தமிழ் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மரணம் : இரங்கல் கூட்டம் நடத்திய எழுத்தாளர்கள்: கடைசி ஆசையின்படி, மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்!

விளாத்திகுளத்தில், பிரபல தமிழ் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மரணம் : இரங்கல் கூட்டம் நடத்திய எழுத்தாளர்கள்: கடைசி ஆசையின்படி, மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்!

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இராமச்சந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபல தமிழ் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், தீபன், சாரு நிலா என்ற மகன் மற்றும் மகள் உள்ளனர்.

 

பிரபல எழுத்தாளரும், பேச்சாளருமாக திகழ்ந்த பா. செயப்பிரகாசம், சூரிய தீபன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகள், கவிதைகள் போன்ற பல்வேறு சமூக அக்கறையுடனான படைப்புகளை எழுதியுள்ளார்.

 

 

அதுமட்டுமின்றி, இவர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பர துறையின் இணை இயக்குனராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

கரிசல் மண் இலக்கியத்தில் சிறந்த முற்போக்கு எழுத்தாளராகவும், சொற்பொழிவாளராகவும் திகழ்ந்த இவர், விளாத்திகுளம்: அம்பாள் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் (23.10.2022) மாலையில் திடீர் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். 

 

 

இந்நிலையில், இன்று (25.10.2022) செவ்வாய் கிழமை எழுத்தாளர்கள் சார்பில், இவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான எழுத்தாளர்கள் கலந்து கொண்டு, மறைந்த பிரபல கரிசல் இலக்கிய எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்துடனான நட்பு பற்றியும்,

 

அனுபவங்கள் பற்றியும் கூறி தங்களது இரங்கலை தெரிவித்தனர். இரங்கல் கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், தமிழ் எழுத்தாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

மேலும், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தனது உடலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்துள்ளார். அதன்படி, அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு எழுத்தாளரின் குடும்பத்தினரால் அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

 

அப்போது அவரது மகன் தீபன் உட்பட குடும்பத்தினர், சக எழுத்தாளர்கள் அனைவரும் கதறி அழுத காட்சிகள் காண்போரை கலங்கச் செய்தது.

 

மறைந்த முற்போக்கு எழுத்தாளரின் உடலை கொண்டு செல்லும்போது, சக எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசத்தின் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )