மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்த இடங்களில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, பொறையார், தரங்கம்பாடி, செம்பனார்கோயில், பரசலூர், ஆக்கூர், காளகஸ்திநாதபுரம், தலைச்சங்காடு, மேலப்பாதி, கிடாரங்கொண்டான், பொன்செய், மேலையூர், கீழையூர், மேமாத்தூர், கீழ்மாத்தூர், முடிகண்டநல்லூர், திருச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10-ம் தேதி இரவு தொடங்கிய கனமழை இடைவிடாது நேற்று முன்தினம் (11ம் தேதி) இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இரவு-பகல் பாராது தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழையால் சம்பா நடவு செய்த வயல்களிலும், பல்வேறு கிராமங்களில் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளிலும் மழைநீர் சூழ்ந்தது.
தலைச்சங்காடு, கிடாரங்கொண்டான், கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் குளம்போல் தேங்கிய மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
ஆங்காங்கே மழைநீர் புகுந்து பழுதான வாகனங்களை வாகன ஓட்டிகள் தள்ளி கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டது.
நேற்று மழைவிட்டு வெயில் அடித்த நிலையில் செம்பனார்கோயில் அருகே ஆக்கூர், தலைச்சங்காடு உள்ளிட்ட கிராமங்களில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மழைநீர் சூழ்ந்த தண்ணீரில் இறங்கி சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
பின்னர் வயல்கள், சாலைகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளலருமான நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மங்கை உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, செம்பனார்கோயில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் மற்றும் அரசு அதிகாரிகள், திமுகவினர் உடனிருந்தனர்.