கடலூர் அருகே நிராமணி கிராமத்திற்கு வடிகால் வசதி அமைத்து தர பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை.!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நிராமணி கிராமத்தில் முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் கிராமமே சேரும் சகதியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
குறிப்பாக நான்காவது வார்டு, மாரியம்மன் கோவில் போன்ற பகுதியில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வாய்க்கால் இல்லாததால் அப்பகுதியில் சூழ்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
சேரும் சகதியும் ஆக உள்ள நிராமணி கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் வடிகால் வசதிகள் அமைத்து தர வேண்டும் என்று பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு மனு கொடுத்தும், ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் தேங்கியுள்ள கழிவுநீரில் கொசு புழுக்கள் உற்பத்தியாகி டெங்கு மலேரியா உள்ளிட்ட மர்ம காய்ச்சல்கள் ஏற்படும் அபாயம் நிலவி வருவதாகவும் இதனால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
– கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.