கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூரில் தொடரும் மின்வெட்டு: கண்டுகொள்ளாத மின்வாரியம்!

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தது காட்டுக்கா நல்லூர். இந்த கிராமத்தில் சுமார் 3000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பிரதான தொழிலாக விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். அத்துடன் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகம் உள்ளனர்.
இந்நிலையில் இந்த கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் விநியோகிக்கப்படும் மின்விநி யோகம் வாம்மா மின்னல் என்றபடி வருவதும் போவதுமாக உள்ளது.
இதனால் பொதுமக்கள் பகலில் சிரமப்படுகின்றனர். இரவில் படிக்க முடியாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தவியாய் தவிக்கின்றனர். இதோடு நின்றுவிட வில்லை. பகல், இரவு என்று பாராமல் இரவு முழுவதும் மின்சாரம் வருவதும் போவதுமாக உள்ளது.
இந்த தொடர் மின்வெட்டு நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும் என்பது காட்டுக்காநல்லூர் கிராம பொதுமக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளாகவும், எதிர்பார்ப்பாகவும் மாறி உள்ளது. தொடர்ந்து இதே போன்று மின்வெட்டு இருந்தால் அனைவரும் ஒன்று கூடி
திருவண்ணாமலை- சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கண்ணமங்கலம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாகவும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மின்வெட்டு இல்லாத நிலையை காட்டுகாநல்லூரில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக மாறி உள்ளது.
இதை உணர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியம் மின்வெட்டு இல்லாத நிலையை காட்டுகா நல்லூர் கிராமத்திற்கு வழங்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.
பொது மக்களுக்கு அரசு சேவை செய்கிறதா அல்லது அரசு தரும் சேவையை மட்டுமே பொதுமக்கள் அனுபவிக்க வேண்டும் என்பதா என்ற கேள்விக்கு விடை தெரியாமல் காட்டுகாநல்லூர் கிராம பொதுமக்கள் வாடி வதங்கி வருகின்றனர்.
இப்படி தொடர் மின்வெட்டு இருப்பதால் கணினி மற்றும் குளிர்சாதன பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு மின்சாதனங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு வீண் செலவு வைப்பது வாடிக்கையான ஒன்றாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசுக்காக மக்களா அல்லது மக்களுக்காக அரசா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். தடையில்லா மின்சாரம் காட்டுகாநல்லூருக்கு என்று கிடைக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.