கோவில்பட்டியில், போதையில் டார்ச்சர் செய்த மகனை வெட்டிக்கொன்ற தந்தை.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மதுபோதையில் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த மகனை, தந்தையே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள காட்டுராமன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் முத்துக்குமார்.
இவருக்குத் குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் தினமும் வேலைக்குச் செல்லாமல் கிடைக்கும் பணத்தில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறிலும் ஈடுபட்டு வந்தார்.
அந்தவகையில் நேற்று இரவும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த முத்துகுமார் தன் தந்தை முத்துராஜூடன் தகராறில் ஈடுபட்டார். முத்துராஜ் சமாதனப்படுத்தியும் கேட்காத முத்துகுமார், தன் தந்தையிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார்.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த முத்துராஜ் வீட்டில் இருந்த அரிவாளால் தன் மகன் முத்துகுமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். தொடர்ந்து முத்துராஜ் காவல் துறையின் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகி விட்டார்.
நாலாட்டின்புதூர் போலீஸார் முத்துகுமார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தலைமறைவாக இருக்கும் முத்துராஜையும் தேடிவருகின்றனர்.
