சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த தொழிலாளிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வாழ் நாள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள பட்டுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (35). கூலி தொழிலாளி. இவர் 2021, அக்டோபர் 31 ஆம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வல்லுறவு செய்தார்.
இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி அழுது கொண்டே வீட்டுக்கு திரும்பினார். இதைப் பார்த்த பெற்றோர், பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட தனது மகளை தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சிவக்குமாரை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜன் விசாரணை செய்து, சிவக்குமாருக்கு வாழ் நாள் சிறை தண்டனையும், ரூபாய் 50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 3 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்தது.