சோளிங்கர் அருகே கூடலூர் காலணியில் வீட்டுமனை வழங்க வலியுறுத்தி பெண்கள் அறப்போராட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கூடலூர் காலனியில் சுமார் 115 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 103 குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக கோரிகை வைத்து வந்தனர். அதன் பேரில் அரசின் விதிமுறைகளின்படி தகுதியுடைய 31 குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கூடலூர் காலணியில் வசிக்கும் 103 குடும்பங்களுக்கும் வீட்டுமனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கூடலூர் பஸ் நிறுத்தம் அருகே அமர்ந்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி சோளிங்கர் தொகுதி தலைவர் பீட்டர் வெஸ்லி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு அதிகாரிகள் 103 பேருக்கு வீட்டுமனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் போராட்டம் தொடர்ந்து நடக்கும் என அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த சோளிங்கர் தாசில்தார் ஆனந்தன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அரசின் விதிமுறைகளின்படி தேர்வு செய்யப்பட்டுள்ள 31 குடும்பங்களுக்கு மட்டுமே வீட்டுமனை வழங்க முடியும் எங்களால் வேறு எதுவும் செய்ய முடியாது ஆகவே போராட்டத்தை கைவிடுங்கள் என தாசில்தார் ஆனந்தன் கூறினார். இதனை ஏற்க மறுத்து மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.