தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குறுக்குத்துறை கல் பாலம் சீரமைக்கப்படுமா ?.

திருநெல்வேலி மாவட்டம் திதி கொடுக்கும் மண்டபத்திற்கு செல்ல வழி இல்லை. மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடங்கி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை வளம் கொழிக்கச் செய்யும் தாமிரபரணி ஆறு வழிநெடுக கல் மண்டபங்கள், சிறிய கல் பாலங்கள், கல் படித்துறைகள் அமைந்துள்ளன.
முன்னோருக்கு திதி கொடுப்பது, இளைப்பாறுதல் என பல பணிகளும் இந்த மண்டபங்களும், பாலங்களும் பயன்படுகின்றன. நெல்லை டவுண் குறுக்குத்துறை பகுதியில் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் பின்புறம் உள்ள தொடர் கல் மண்டபங்களில் கடைசி கல் மண்டபம் திதி கொடுப்பதற்கும்,
இறந்த நபரின் 16ம் நாள் சடங்கு நிகழ்ச்சிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆற்றின் நடுவே உள்ள மண்டபத்திற்கு செல்ல பல நூறு ஆண்டு பழமை வாய்ந்த கல் பாலத்தின் வாழியாகத் தான் செல்ல வேண்டும்.
இந்த கல் பாலம், கடந்த 1992ம் ஆண்டுவெள்ளத்தை தாங்கி நின்றது.இந்நிலையில் கடந்த 2021. பொங்கல் பண்டிகையையொட்டி ஆற்றில் கரைபுரண்ட வெள்ளத்தில் இந்த கல் பாலத்தின் பாதி பகுதி உடைந்து விழுந்தது.
இதனால் தற்போது இப்பகுதியை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக படித்துறையையும், கல் மண்டபத்தையும் பயன்படுத்த முடியவில்லை. கல் பாலம் உடைந்து விழுந்த பகுதியில் பாம்புகள் தொல்லை அதிகம் உள்ளன.
இதை மீறி சிலர் துணிச்சலாக உடைந்த பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீரில் இறங்கி மறுபகுதியை கடக்கின்றனர். இவ்வாறு செல்லும்போது தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
எனவே மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டு, குறுக்குத்துறை ஆற்றிலுள்ள கல் பாலத்தை பழமைமாறாமல் சீரமைத்து கொடுக்க வேண்டுமென நெல்லை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.