நெல்லை பஸ் ஸ்டாப் அருகே ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் முதியவர்; நெல்லையில் பெரும் பரபரப்பு..

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் மதுரை சங்கரன் கோவில் ராஜபாளையம் மார்க்கமாக வரும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு முன்னதாக நிறுத்தப்படும் பஸ் ஸ்டாப் அருகே முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் இதுகுறித்து நெல்லை பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியது. இதில் முதியவரின் பல் மற்றும் உடலில் ரத்த காயங்கள் இருந்துள்ளது. இதனால் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பாரோ என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
பின்னர் போலீசார் பேருந்து நிறுத்தத்தின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில், தச்சநல்லூர் பகுதியில் இருந்து நெல்லை வண்ணார்பேட்டை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்றில் இருந்து உயிரிழந்த முதியவரை ஒரு நபர் இறக்கி கழுத்தில் கை வைத்து தள்ளியவாறு சென்ற காட்சிகளும் அதனைத் தொடர்ந்து இரண்டு வாகனங்களுக்கு பின்னால் நின்று கொண்டு முதியவரை சரமாரியாக தாக்கி கழுத்தை நெரிக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்ததாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து இந்த சம்பவம் கொலை என்பதை உறுதி செய்த போலீசார், பேருந்தில் வந்த நபர் யார்? அந்த நபருக்கும் முதியவருக்கும் என்ன தொடர்பு? எங்கிருந்து இந்த முதியவர் அழைத்து வரப்பட்டார்? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த முதியவரிடமிருந்து அடையாளங்களை காண்பதற்கான எந்த பொருளும் கிடைக்கவில்லை.
ஆனால் முதியவர் வைத்திருந்த உடைமையில் குறிப்பிட்ட கடை ஒன்றின் பெயர் கொண்ட பை இருந்தது. அந்த கடையில் பெயரை விசாரித்த போது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த கடை என தெரியவந்தது.
பின்னர் ராஜபாளையம் போலீசாரின் உதவியுடன் நெல்லை காவல் துறையினர் அடுத்த கட்ட விசாரணையை துவங்கினர். அப்போது சடலமாக கண்டெடுக்கப்பட்ட முதியவர் ராஜபாளையம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து (75) என தெரியவந்தது. நிலையில் போலீசார் வண்ணாரப்பேட்டை மதுரை சாலையில் உள்ள பல்வேறு சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டனர்.
விசாரணையில் மாரிமுத்துவின் மகனே அவரை கொன்றது தெரியவந்தது. மாரிமுத்து மகன் கடல்கன்னி தனது தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவனத்தின் கார் பார்க்கிங் பகுதிக்கு அழைத்துச் சென்று பட்டப்பகலில் இரண்டு கார்களுக்கு இடையே வைத்து முதியவரை கழுத்தை நெறித்து சரமாரியாக தாக்கியதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது போலீசார் தப்பி ஓடிய கடல் கன்னியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மக்கள் அதிக நடமாட்டம் இருக்கும் பேருந்து நிறுத்தம் ஒன்றில் 74 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அடித்து கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.