பசுமை தமிழகம் இயக்கத்தில் 2022-23-ஆம் ஆண்டில் 21 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பசுமை தமிழகம் இயக்கத்தில் 2022-23-ஆம் ஆண்டில் 21 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் மரக்கன்றுகளை நடவு செய்து தொடங்கி வைத்தனர்.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், மீனாட்சிநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் வனத்துறை சார்பில் பசுமை தமிழகம் இயக்கத்தில் 2022-23-ஆம் ஆண்டில் 21 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் அவர்கள் தலைமையில் இன்று(24.09.2022) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து, மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) தினேஷ்குமார், அவர்கள், மாவட்ட வன அலுவலர்(திண்டுக்கல்) பிரபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதன் விளக்கம் பின்வருமாறு..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டமான பசமை தமிழகம் இயக்கம் (Green Tamilnadu Mission) திட்டத்தினை 2021-22-ஆம் ஆண்டில் அறிவித்து செயல்படுத்தினார்கள்.
இத்திட்டத்தின் கீழ், அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 23.8 சதவீதம் உள்ள காடுகளின் பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்தும் வகையில் 10 ஆண்டுகளில் 260 கோடி மரக்கன்றுகளை (பெரும்பாலும் நாட்டு மரக்கன்றுகள்) நடவு செய்ய உத்தேசிக்கப்பட்டு, வனப்பகுதிளில் காடு வளர்ப்பு மற்றும் வனப்பகுதிகளுக்கு வெளியே உள்ள காலி இடங்களிலும் மரக்கன்றுகள் நடுதல்,
விவசாய நிலங்களில் விவசாய பயிர்களோடு வருமான வாய்ப்புகளை அதிகரிக்க மரக்கன்று நடுதல், சமூக பொது மற்றும் தனியார் பங்களிப்போடு மரங்களை வளர்த்து, பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2022-23-ஆம் ஆண்டிற்கு மரக்கன்றுகள் நடும் இயக்கத்தினை, சென்னை வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வளாகத்தில் இன்று(24.09.2022) தொடங்கி வைத்துள்ளார்கள்.
அதனடிப்படையில், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், மீனாட்சிநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து, மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தனர்.
இத்திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு 21 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கினை விட கூடுதலாக 23 இலட்சம் மரக்கன்றுகள் வரை நடவு செய்யப்படவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் வனக்கோட்டம், கொடைக்கானல் வனக்கோட்டம் மற்றும் திண்டுக்கல் சமூக வனக்கோட்டம் மூலம் விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள், கல்வி நிறுவன வளாகங்கள், அரசு நிலங்கள் மற்றும் தரம் குன்றிய காடுகள் ஆகிய நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் ஈட்டி, தேக்கு, மகாக்கனி, குமிழ், வேங்கை, ஆலமரம், அரச மரம், பூவரசு, வேம்பு, இலுப்பை, புங்கன், சரக்கொன்றை, புளி, கொடுக்காப்புளி, அத்தி, பலா, கொய்யா, நெல்லி, நாவல் உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு நடவு செய்து தரப்படுகிறது.
பசுமை தமிழகம் இயக்கத்தின் மூலம் வரும் 10 ஆண்டுகளில் வனப்பரப்பினை 33 சதவீதத்திற்கு மேல் உயர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில், உதவி வன பாதுகாவலர் இளங்கோ, சிறுமலை வன அலுவலர் மதிவாணன், முதன்மைக் கல்வி அலுவலர் நாசருதீன், வனவர் அப்துல்ரகுமான் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.