முதல் முறையாக சென்னை அடுத்த படப்பையில் 500 காளைகள் பங்கு பெறும் ஜல்லிக்கட்டு போட்டி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடத்தப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முதல்முறையாக சென்னை அடுத்த படப்பையில் ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன். வரலாற்றில் முதல்முறையாக சென்னை தாம்பரம் அடுத்த படப்பை கரசங்கால் பகுதியில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதி மக்களின் நீண்ட கால ஏக்கம் தீரும் வகையில் நடத்த இருக்கிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் பெயரில் ஒரு காளை உட்பட தமிழகத்திலேயே சிறந்த 501 காளைகள் இடம் பெற உள்ளது மேலும் தமிழகத்திலேயே சிறந்த மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
கூடுதல் சிறப்பாக வேறு எங்கும் இல்லாத வகையில் முதல் முறையாக மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு வழங்க உள்ளோம். ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் இடம் பெறும் காளைக்கு கார் பரிசாகவும்,முதல் மாடுபிடி வீரருக்கு மோட்டார் சைக்கிளும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும் அனைத்து காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு வழங்க இருக்கிறோம்.
ஏற்கனவே பலமுறை ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒருங்கிணைத்த ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கத்தோடு இணைந்து இப் போட்டியை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம் தேவையான சுகாதார வசதிகள், பார்வையாளர்களுக்கான வசதிகள், காளை மாடுகளுக்கு மாடுபிடி வீரர்களுக்கான வசதிகள் செய்து தர திட்டமிட்டு இருக்கிறோம். பத்தாயிரம் நபர்கள் போட்டிகளை பார்ப்பதற்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம் அவர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பு இதற்கான பணிகள் தொடங்கி விட்டது இன்னும் இரண்டு மாதங்கள் இருப்பதால் தேவையான ஏற்பாடுகளை செய்து முடிப்போம்.
சென்ற ஆண்டு போட்டியை நடத்துவதற்கு திட்டமிட்டோம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவற்றால் நடத்த முடியவில்லை இந்த ஆண்டு தமிழக முதலமைச்சரின் பிறந்த நாளை ஒட்டி இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஆளுநராக பொறுப்பேற்ற துவக்கத்திலிருந்து தவறான கருத்துக்களை ஆளுநர் தெரிவித்து வருகிறார். நமது உணர்வை தூண்டும் வகையில் பேசுவதால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. என்று தெரிவித்தார் மேலும் ஆளுநரை கண்டித்து பதாகைகளோ சுவரொட்டிகளோ ஒட்டக்கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார் என்று தெரிவித்தார்.