பிரம்மபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் தட்டு முட்டு சாமான்களை அடுக்கி வைக்கும் இடமாக மாறியுள்ள அவலம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பிரம்மபுரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதற்கு முன்னர் இங்கு பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர் ரேகா எதையும் கண்காணிக்காமல், கவனிக்காமல் விட்டுவிட்டு ஏனோதானோ என்று கடமைக்கு பணிபுரிந்து வந்தார். அதன் விளைவு தற்போதும் எதிரொலித்து வருகிறது. அதாவது பணியிட மாற்றத்தில் ரேகா சென்ற பிறகும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் தட்டு முட்டு சாமான்களை அடுக்கி வைக்கும் இடமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த அவலம் மாறிய பாடு இல்லை.

புதியதாக கிராம நிர்வாக அலுவலராக பிரம்மபுரத்துக்கு வந்துள்ள புதிய கிராம நிர்வாக அலுவலரும் கண்டும் காணாமல் விட்டுவிட்டு அவரது பாக்கெட்டை நிரப்பும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அங்குள்ள பொதுமக்கள் தரப்பில் புகாராக கூறப்படுகிறது.

வீடு கட்டும் பொருள்கள் தட்டுமுட்டு சாமான்கள் என அனைத்தையும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை சுற்றி அடுக்கி வைத்து அந்த அலுவலகத்தின் தோற்றத்தையே மறைத்து அந்த இடத்தையே அசிங்கப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை பார்த்து கண்டிக்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலர் யார் வீட்டு இழவோ பாய் போட்டு அழுகிறது என்ற ரீதியில் அவர் உண்டு அவரது வேலை உண்டு என்று எதையும் கண்டும் காணாமல் உள்ளார். தற்போது பிரம்மபுரம் கிராம நிர்வாக அலுவலர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புறம்போக்கு இடம் என்பது இல்லாத அளவிற்கு அனைத்தையும் கூறு போட்டு விற்று விட்டு சென்று விட்டார் ரேகா என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. இப்படி அரசின் சொத்துக்கள் பல சமூக விரோதிகளுக்கும்,

அரசியல்வாதிகளுக்கும், மிரட்டும் ரவுடிகளுக்கும் பாகம் பிரித்து தரப்பட்டுள்ளது பிரம்மபுரத்தில் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. புறம்போக்கு இடம் மட்டுமல்ல, தரிசு நிலங்கள் மற்றும் பஞ்சமி நிலங்களை கூட விட்டு வைக்காமல் அனைத்தையும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர்.
மீட்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர். வருவாய்த்துறை என்ற பெயர் இதற்கு சரியாக பொருந்துகிறது என்றே சொல்லலாம். வருவாயை தனக்கு எடுத்துக் கொண்டு செல்வதிலேயே கிராம நிர்வாக அலுவலர்கள் குறியாக உள்ளனர் என்று சொன்னால் அதுதான் உண்மையிலும் உண்மை. இதை யாராலும் மறுக்க முடியாது.
இன்றைக்கு எவ்வளவு கல்லாகட்டுவது என்ற ரீதியிலேயே கிராம நிர்வாக அலுவலர்கள் தினமும் பணிக்கு வருகின்றனர். அதிலும் ஒரு சிலர் தான் என்று சொன்னால் அதுதான் உண்மை. ஏதோ ஒரு பத்து சதவீதம் பேர் கடமையை உணர்ந்து தனது குடும்ப சூழ்நிலையை எண்ணிப் பார்த்து பணியாற்றுகின்றனர். ஆனால் பலர் தான்தோன்றித்தனமாகவும், தெனாவெட்டாகவும் பணியாற்றி வருவதை யாரும் மறுக்க முடியாது. இப்படி அரசு சொத்தை யார் வீட்டு சொத்து என்ற ரீதியில் விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பதை விட்டு விட்டு அரசு சொத்துக்களை மீட்க வேண்டும் என்ற மனரீதியில் விஏஓக்கள் மாற வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
தான் வேலை செய்யும் இடம் கோயில் போன்றது என்பதை நினைவில் கொண்டு பணியாற்றினால் இது போன்ற அவலங்கள் தொடராது, வளராது, அடியோடு மறைந்து போகும் அளவிற்கு நிலைமை மாறும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. மறந்தும் இருந்து விடக்கூடாது.
இது போன்ற அலட்சியப் போக்கை கைவிட்டு விட்டு நாம் இருக்கும் இடத்தையும், நமது சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள அலுவலகம் அலுவலகம் போல் காட்சியளிக்க வேண்டும் என்ற மனரீதியில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்ற முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், கிராம பொதுமக்களும், நாடு நலம்பெற வேண்டும் என்று விரும்பும் நடுநிலையாளர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்கள் இனியாவது தான் வேலை செய்யும் இடத்தையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும், யாரையும் ஆக்கிரமிப்பு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும் முன்வர வேண்டும் என்பதே அனைவரது ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் அவ்வப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றும் இடங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
