போடி வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போடி வனச்சரகத்திற்குட்பட்ட பிச்சங்கரை வனப்பகுதியில் வனப்பாதுகாவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் சுற்றித் திரிந்தது தெரிந்தது.
இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் அனுமதி பெறாத ஒற்றைக்குழல் துப்பாக்கி ஒன்று, தலையில் கட்டக்கூடிய டார்ச் லைட் மற்றும் வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் ஆயுதங்களும் வைத்திருந்தது தெரிந்தது.

இதனையடுத்து அவர்களை போடி வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில் அவர்கள் போடி குண்டல்நாயக்கன்பட்டியை சேர்ந்த பெருமாள்சாமி மகன் குமார் (24), போடி வடக்கு சூலப்புரத்தை சேர்ந்த எத்திலாவுலு மகன் ஜெகநாதபாண்டி (22), போடி மேற்கு சூலப்புரத்தை சேர்ந்த லிங்கசாமி மகன் எத்தையா (32), போடி மேற்கு சூலப்புரத்தை சேர்ந்த ராசு நாயக்கர் மகன் எர்ரையா (42) ஆகியோர் என்பது தெரிந்தது.
இதகுறித்து போடி வனச்சரக அலுவலர் ச.நாகராஜன் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து போடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பிச்சங்கரை வனப்பகுதியில் தொடர்ந்து வன விலங்குகள் வேட்டையாடப்படுவது தொடரும் நிலையில் தற்போது 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
