நீலகிரியின் நிலத்தையும், பழங்குடியின மக்களையும் அரசு பாதுகாக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.
நீலகிரியின் நிலத்தையும், பழங்குடியின மக்களையும் அரசு பாதுகாக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.
உதகை வட்டம், பகல்கோடு மந்து கிராமத்திற்கு நேரில் சென்று அவர்களது குடியிருப்புப்பகுதிகளை முதலமைச்சர் பார்வையிட்டார். மேலும் அக்கிராமத்தைச்சேர்ந்த தோடர் பழங்குடியின மக்களிடம், அவர்களது வாழ்க்கை, கலாசார முறை குறித்து கேட்டறிந்து, அவர்களிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
அப்போது அம்மக்கள் முதலமைச்சர் ஒருவர் தங்கள் பகுதிக்கு வருவது இதுவே முதல் முறை என்றும், தோடர் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதற்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், மாவட்ட அளவில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஒரு தனி இணைய முகப்பு (Portal) ஆரம்பித்து, தங்களது தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதற்கு நன்றி தெரிவித்தனர்.
நீலகிரியில் வனப்பகுதியை 33 விழுக்காடாக பெருக்குவதாக அறிவித்து, வனப்பகுதிகளையும், வனவிலங்குகளையும் காப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கும் தோடர் இன மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். பழங்குடியின மக்களிடம் முதலமைச்சர் பேசும்போது, ‘நீலகிரியின் நிலத்தை இந்த அரசு காக்கும். மலைகளோடு சேர்த்து பழங்குடியின மக்களையும், இந்த அரசு பாதுகாக்கும். பகல்கோடு மந்து பகுதியில் பால் பதப்படுத்தும் நிலையம் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதி மக்களுக்காக, நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஒரு சமுதாயக் கூடம் கட்டித் தரப்படும்’ என்று தெரிவித்தார்.
எந்த உதவி தேவைப்பட்டாலும், தன்னைத் தொடர்பு கொள்ளலாம் என்றும், உங்களுக்காக அரசு அனைத்துவித உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது எனவும் முதலமைச்சர் கூறினார். மேலும் ஊட்டியில் படுகர் இன மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனம் ஆடிய முதலமைச்சர், அவர்களுடன் இணைந்து உணவு அருந்தினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.