போதையில் இருந்த வாலிபர்களை லாரி ஏற்றிக் கொன்ற வடமாநில டிரைவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

போதையில் இருந்த வாலிபர்களை லாரி ஏற்றிக் கொன்ற வடமாநில டிரைவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். செங்குன்றத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் தனியாருக்கு சொந்தமாக உள்ள லாரி பார்க்கிங் பகுதியில் வடபெரும்பாக்கம் விநாயகபுரத்தை சேர்ந்த கமலக்கண்ணன் (36), நவீன் (36), வடகரையை சேர்ந்த குமரன் (34) மற்றும் நண்பர்கள் சேர்ந்து நேற்று மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த, தனது லாரியை எடுக்க வடமாநில லாரி டிரைவர் வந்துள்ளார். லாரியை எடுக்கப் போகிறேன் வழிவிடுங்கள் என்று டிரைவர் கூறியுள்ளார். இதனால், வடமாநில லாரி டிரைவருக்கும், போதையில் இருந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, டிரைவர் லாரியை திடீரென எடுத்துக் கொண்டு, போதையில் இருந்தவர்கள் மீது வேகமாக மோதினார். இதில், கமலக்கண்ணன் உடல் நசுங்கி பலியானார். படுகாயமடைந்த நவீன், குமரன் ஆகியோர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி குமரன் உயிரிழந்தார். இதனிடையே தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் லாரி பார்க்கிங் யார்டில் நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து செங்குன்றம் காவல் துறையினர் தப்பி ஓடிய வடமாநில லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
