10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திட்டமிட்ட படி வெளியாகும் என இரண்டு மூன்று நாட்களாக கூறி வந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. அதன்படி, கடந்த மாதம் 6-ம் தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது.
இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அதன்பின், கடந்த 1-ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி சுமார் 83 மையங்களில் நடைபெற்றது.
இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி, வரும் ஜூன் 17-ம் தேதி வெளியிடப்படம். மாணவர்கள் தங்கள் முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது திடீரென்று 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 20-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை 20.06.2022 (திங்கட்கிழமை) நண்பகல் 12.00 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் வெளியிடுகிறார். பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://tnresults.nic.in, https://dge2.tn.nic.in, https://dge.tn.gov.in ஆகிய இணையதள பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
இதுபோன்று, ஜூன் 20 காலை 9.30 மணிக்கு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முதல்முறையாக ஒரே நாளில் வெளியிடப்படுகிறது.