கல்லூரி மாணவிக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை தட்டி தூக்கிய காவல்துறை.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நாகர்கோவிலைச் சேர்ந்த 23 வயதான என்ஜீனியர் பட்டதாரி பெண் ஒருவர் புகார் அளிக்க வந்திருந்தார். அதில், சென்னையில் இயங்கி வரும் ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
அப்போது இளம் பெண்ணுக்கு முகேசுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. பின்னர் காதலனின் செயல்பாடுகள் சரி இல்லாமல் போகவே இளம் பெண் அவரிடம் இருந்து விலகி உள்ளார்.இந்நிலையில் பல நாட்கள் கழித்து பெண் என்ஜினீயரை தொடர்பு கொண்ட வாலிபர் முகேஷ், மிரட்டும் தோரணையில் பேசியுள்ளார். அதில், காதலிக்கும் காலத்தில் நாம் எடுத்துக் கொண்ட புகைப்படங்ளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன். அப்படி நடக்க வேண்டாமென்றால் எனக்கு நீ ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன இளம்பெண், இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வந்து புகார் மனு அளித்தார். இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த சைபர் கிரைம் போலீசார், முகேஷின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். அதன் மூலம் முகேஷ் நாகர்கோவில் வந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து விரைந்து சென்று முகேஷை கிரைம் போலீசார் வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முகேஷ், சிறையில் அடைக்கப்பட்டார்.
