ஏல சீட்டு நடத்தி பண மோசடி செய்ததாக தம்பதி மீது புகார்-கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த பொதுமக்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- காரமடை பெட்டதாபுரம் கணபதி நகர் பகுதியில் கணவன்-மனைவி மற்றும் அவரது மகள் ஆகிய 3 பேரும் சேர்ந்து சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் கடந்த 20 வருடங்களாக ஏலச்சீட்டு நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் நாங்கள் ஏலச்சீட்டில் இணைந்து மாதம் மாதம் பணம் செலுத்தி வந்தோம். இந்த நிலையில் ஏலச்சீட்டு நிறைவடைந்த பிறகும் அதற்கான பணத்தை இதுவரை தரவில்லை.
பின்னர் மீண்டும் அவர்களது வீட்டுக்கு சென்று பணம் கேட்டபோது தனது கணவர் வெளியூர் சென்று உள்ளதாகவும், அவர் வந்தவுடன் திருப்பி தந்து விடுவதாக கூறினர். சில நாட்கள் கழித்து மீண்டும் பணம் கேட்டபோது ஏலச்சீட்டிற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என தெரிவித்தனர். மேலும் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டி னர். நாங்கள்கூலி வேலைகளுக்கு சென்று சம்பாதித்து ஏலச்சீட்டில் முதலீடு செய்து உள்ளோம். அதனை நம்பித்தான் எங்களது குடும்பம் உள்ளது. எனவே ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களிடம் இருந்து எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
