கோவில் நிலத்தை தனி நபருக்கு பட்டா வழங்கியதால் சாலை மறியல்..!!! போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி.

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த குஞ்சாம்பாளையம் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனி நபர்களுக்கு அரசு அதிகாரிகள் பட்டா வழங்கியதை கண்டித்து பெண்கள் உட்பட அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு..

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட குஞ்சம்பாளையம் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனி நபர்களுக்கு வருவாய் துறை அதிகாரிகள் பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து, ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் எடப்பாடியிலிருந்து குமாரபாளையம் செல்லும் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இத்தகவலறிந்த தேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனி நபர்களுக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

மேலும், இந்த சாலை மறியலால் எடப்பாடியிலருந்து குமாரபாளையம் செல்லும் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
