BREAKING NEWS

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் விழா – சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு கார் பரிசு – அமைச்சர் பி.மூர்த்தி.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் விழா – சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு கார் பரிசு – அமைச்சர் பி.மூர்த்தி.

மதுரை மாவட்டம்,

உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 17ம் தேதி அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்குள்ள வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

 

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, எம்எல்ஏ வெங்கடேசன், மற்றும் அரசு அலுவலர்கள், விழாகுழுவினர், கிராம பொதுமக்கள் முன்னிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கால்கோள் நடும் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அணிஷ்சேகர், மதுரை சரக டி.ஐ.ஜி. பொண்ணி,

 

 

மாவட்ட எஸ்.பி.சிவபிரசாத், கூடுதல் கலெக்டர்கள் சரவணன், திவ்யான்ஷி நிகம், தாசில்தார் வீரபத்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜூலாண் பானு, திமுக அவை தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் பரந்தாமன், நகர் செயலாளர் ரகுபதி, பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, துணை தலைவர் சுவாமிநாதன், மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதைத்தொடர்ந்து அமைச்சர். பி. மூர்த்தி பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது. வழக்கத்தை போலவே இந்த ஆண்டும் உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 17ம் தேதி அரசு வழிகாட்டுதல் படி சீரும் சிறப்புமாக நடைபெறும்.

 

 

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பரிசு பொருட்களை வழங்குவார். இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயம் வழங்கப்படும். சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளைக்கு கார் மற்றும் சிறந்த மாடுப்பிடி வீரருக்கு ஒரு கார் பரிசாக வழங்கப்படும்.

 

இரண்டாம் பரிசாக இரு சக்கர வாகனம் வழங்கப்படும். மேலும் மாடு பிடிக்கும் அனைத்து மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயம் வழங்கப்படும். விலையுயர்ந்த பரிசு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்படும். அரசின் வழிகாட்டுதல்படி அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டு மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம்.

 

 

காளைகளுக்கும் தற்போது மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது தகுதி பெறும் காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து அலங்காநல்லூர் கால்நடை மருத்துவமனையில் நடைபெறும் காளைகளுக்கான உடற் தகுதி பரிசோதனையை அமைச்சர் பி.மூர்த்தி நேரில் சென்று பார்வையிட்டு தகுதி பெறும் காளைகளுக்கு சான்றிதழை வழங்கினார்.

CATEGORIES
TAGS