பகலில் நோட்டம் பார்த்து இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களை திருடி அடகு வைத்த திருடன், சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு தட்டி தூக்கிய காவல்துறையினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, செம்பனார்கோவில், பெரம்பூர், குத்தாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடு போய் வந்தன இது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் தொடர்ந்து பதிவாகின.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான தனிப்படையினர் பல்வேறு இடங்களில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் கண்டறிந்தனர். இதையடுத்து மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தை திருடமுயன்ற போது அந்த நபரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் செம்பனார்கோவில் அருகே கீழையூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் சதீஷ்குமார் (28) என்பது தெரிய வந்தது. பகலில் நோட்டம் பார்த்து இரவு நேரத்தில் வாகனங்களை திருடி அடமானம் வைத்து செலவு செய்தது தெரியவந்தது.
அவரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர் பல்வேறு இடங்களில் அடமானம் வைத்திருந்த 20 இருசக்கர வாகனத்தை மீட்டு மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ் குமார் காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.