மாவட்ட செய்திகள்
ஒடசல்பட்டி அரசுப் பள்ளியில் மூன்று நாள் புத்தகத்திருவிழா தொடங்கியது.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகம், ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, திருவள்ளுவர் பொத்தக இல்லம் இணைந்து நடத்தும் 3 நாள் புத்தகத் திருவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. தொடக்க விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியை இரா. நிர்மலா தலைமை வகித்தார்.
இராமியனள்ளி கிளை நூலக நூலகர் சண்முகம், மணியம்பாடி ஊர்ப்புற நூலகர் எம். சிவகாமி, நல்லகுட்லஹள்ளி ஊர்ப்புற நூலகர் சிவகாமி, ஒடசல்பட்டி ஊர்ப்புற நூலகர்.தேன்மொழி முன்னிலை வகித்தனர். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரமேந்தர், திருவள்ளுவர் பொத்தக இல்லம் நிறுவனர் நெடுமிடல், மலரும் உள்ளாட்சி மாத இதழ் ஆசிரியர் பொம்மிடி முருகேஷ் வாழ்த்திப் பேசினர்.
சிறப்புரையாற்றிய கடத்தூர் கிளை நூலகம் நூலகர் சரவணன், “மாணவர்கள் பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தங்கள் அறிவையும் ஆளுமையையும் மேம்படுத்திக்கொள்ள முடியும்; அதற்கு பள்ளி மாணவர்கள் அருகாமையில் உள்ள ஊர்ப்புற, கிளை நூலகங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
விழாவில் மாணவர்களும் பெற்றோர்களும் திரளாக கலந்துகொண்டனர். முதல் விற்பனையை தலைமை ஆசிரியை தொடங்கி வைத்தார். இந்த புத்தகக் கண்காட்சியில் ஐந்து ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலான மலிவான விலையில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விற்பனை செய்து வருகிறது தருமபுரி திருவள்ளுவர் பொத்தக இல்லம். இந்த விழாவின் இறுதி நாளான சனிக்கிழமை, பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் அளிக்கப்படும்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.