BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியில் பால் பண்ணைக்கு மர்மநபர்கள் தீ வைத்து செல்லும் சிசிடிவி காட்சி.

திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியில் பால் பண்ணைக்கு மர்மநபர்கள் தீ வைத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. கஞ்சா கும்பலின் கைவரிசையா போலீசார் விசாரணை..

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி சேர்ந்த பாலகுமரேசன்(45). இவர் தொண்டு நிறுவனம் நடத்திவருகிறார். இவருக்கு முத்து கிருஷ்ணாபுரத்தில் பால் பண்ணை ஒன்று உள்ளது. இதில் 55 மாடுகளும் 40 கன்றுகளும் உள்ளது. இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி நள்ளிரவில் பால் பண்ணை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது அங்கு பராமரிப்புப் பணியில் இருந்த பணியாளர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதி மக்கள் உதவியுடன் தீயை விரைவாக அணைத்தனர்.

இதனால் பால் பண்ணையில் இருந்த மாடுகள் கன்றுகள் சுமார் 5 லட்சம் மதிப்பிலான வைக்கோல், மாட்டு தீவனங்கள், பால்பண்ணை அருகில் கூரை செட்டில் நிறுத்தப்பட்ட 5 வாகனங்கள் அதிர்ஷ்டவசமாக தப்பியது. இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பால்பண்ணை அருகே பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இரண்டு மர்ம நபர்கள் பால்பண்ணை எதிரே உள்ள தோட்டத்திலிருந்து சாலையை கடந்து வேகமாக ஓடிவந்து பால்பண்ணையில் ஓலை செட்டுக்கு கையிலிருந்த பொருளை தூக்கி வீசுகின்றனர். உடனே அந்த செட் வேகமாக தீப்பிடிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்து. அந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆறுமுகநேரியில் கஞ்சா போன்ற போதை பழக்கத்தில் ஈடுபடுவர்கள் பொதுமக்களிடம் வழிப்பறி போன்ற சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆறுமுகநேரி முத்துகிருஷ்ணாபுரம், சீனந்தோப்பு, ராஜமன்யபுரம் ஆகிய பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த மாதம் 27-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு பிறகு மார்ச் 30-ம் தேதி இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ராஜமன்யபுரத்தைச் கேம் ராஜ் என்பவருடைய ஆட்டோவை நள்ளிரவில் ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. மேலும் சாலைமறியல் போராட்டத்தில் பங்கேற்ற பாலகுமரேசன் பால் பண்ணைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. கஞ்சா கும்பல் இந்த தொடர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இந்த கஞ்சா வியாபாரி, கஞ்சா பழக்கத்தில் ஈடுபடும் நபர்கள் பற்றி போலீசாரிடம் தெரிவித்தால் அவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவம் நடந்து வருகிறது. இதனால் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுவரை நடந்த தொடர் சம்பவங்களில் போலீசார் ஒருவரைக்கூட கைது செய்யாததால் கஞ்சா கும்பலின் சமூக விரோத செயல் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. தனிப்படை அமைத்து இந்த கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )