சினிமா
திறந்திருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்த பிரபல பாடகரின் கால் எலும்பு முறிந்தது.
பிரபல கர்நாடக இசைப் பாடகர் அஜய் வாரியர். பெங்களூருவில் வசித்து வரும் இவர், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் ஏராளமான பக்தி பாடல்களையும் சினிமா பாடல்களையும் பாடியுள்ளார். இவர் கடந்த 9-ம் தேதி கேரளா செல்லும் ரயிலை பிடிப்பதற்காக, தொட்டகல்லாசந்திரா மெட்ரோ ஸ்டேஷனுக்கு சென்றுகொண்டிருந்தார். மழை பெய்ததால் வேகமாக நடந்து சென்றார்.
அப்போது திறந்து கிடந்த கழிவு நீர் கால்வாயில் எதிர்பாராமல் விழுந்தார். இதில், அவர் கால் எலும்பு முறிந்தது. அந்த வலியோடு கேரளா சென்றார். எர்ணாகுளம் மருத்துவமனையில் அவர் காலில் 13 தையல்கள் போடப்பட்டன.

இதுகுறித்து அவர் ஃபேஸ்புக்கில், “கடவுளின் அருளால் அன்று உயிர் தப்பினேன். கழிவுநீர் கால்வாயில் விழுந்ததும் என் கழுத்து வரை சாக்கடை நிரம்பியிருந்தது. நல்ல வேளையாக நான் வைத்திருந்த சூட்கேஸ், சாக்கடையில் அடித்துச் செல்வதில் இருந்து என்னைக் காப்பாற்றியது. ஆனால், காயங்கள் கடுமையான வலியை ஏற்படுத்தின. இதற்கு பெங்களூரு மாநகராட்சியின் அலட்சியமே காரணம்” என்று நீண்ட பதிவை எழுதியுள்ளார்.
இதை இப்போது ஏன் பதிவிடுகிறேன் என்றால் மற்றவர்களுக்கு இதுபோன்ற சம்பவம் நடந்துவிடக் கூடாது என்பதால்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரபல பாடகரின் இந்தப் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
