மயிலாடுதுறை மாவட்டம் நெடுவாசல் ஊராட்சியில் வாய்க்கால் தூர்வாரும் பொழுது 5 அடி உயர கற்சிலை கண்டெடுப்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நெடுவாசல் ஊராட்சி செறுகடம்பூர் கிராம சிங்கமடை பாசன வாய்க்காலில் கடந்த வாரம் 11 ஆம் தேதி ஜேசிபி உதவி கொண்டு தூர்வாரும் பொழுது மண்ணிற்கு அடியில் இருந்து 5 அடி உயரத்தில் பழம்பெறும் கருங்கல்லாலான பெருமாள் சிலை வாய்க்காலில் இருந்து எடுத்து கரையில் ஓரம் ஜேசிபி ஓட்டுநர் வைத்திருந்துள்ளார்.
தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி ஜெயபால் தரங்கம்பாடி வட்டாட்சியர் மற்றும் பொறையார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து வட்டாட்சியர் சரவணன் நேரில் ஆய்வு மேற்கொண்டு சிலையை கைப்பற்றி தகவலை தொல்லியல் துறைக்கு தெரியப்படுத்தினார். தொடர்ந்து பெருமாள் சிலைக்கு ஊர் பொதுமக்கள் பூஜைகள் செய்து வழி அனுப்பினர்.
வட்டாட்சியர் சரவணன் கைப்பற்றிய சிலையை தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிலையை பாதுகாப்பாக வைத்துள்ளனர். நிகழ்வின் போது சரக வருவாய் ஆய்வாளர் கண்ணதாசன், கிராம நிர்வாக அலுவலர் சவுரிராஜ் மற்றும் பொறையார் காவல்துறையினர் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.