நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தெரு நாய் கடித்து 20 பேர் காயம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தெரு நாய் கடித்து 20 பேர் காயம் . நாளுக்கு நாள் தெரு நாய்கள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகிறது. சுமார் 30-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு, பொதுமக்களை அச்சுறுத்துவது, சண்டையிட்டுக் கொள்வது ,நடு சாலையில் படுத்து உறங்குவது என தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது. நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அவ்வப்போது தெருநாய்கள் பிடிக்கப்பட்டு வெறிநாய் தடுப்பூசி மற்றும் கருத்தடை ஊசி உள்ளிட்டவை செலுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத நிலையே உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை ஒட்டமெத்தை, பூலாக்காட்டூர், குமாரபாளையம் சாலை உள்ளிட்ட இடங்களில் கருப்பு நிற நாய் ஒன்று சாலையில் நடந்து செல்வோர், இருசக்கர வாகனத்தில் செல்வோரை துரத்தி துரத்தி கடித்துள்ளது. இதில் 20 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் .இதனை அடுத்து நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.