தடை செய்யப்பட்ட புகையிலை கடத்திய 2 வட மாநில வாலிபர்கள் உட்பட 3 பேர் கைது
கோவில்பட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை கடத்திய 2 வட மாநில வாலிபர்கள் உட்பட 3 பேர் கைது – 300 கிலோ புகையிலை பொருட்கள் – கார் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் சாலைப்புதூர் சுங்கச்சாவடி அருகே கயத்தார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தமிழ்செல்வன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 300 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணை செய்ததில் காரை ஓட்டி வந்தது திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள நாரணம்மால்புரம், மருத்துவர் தெருவை சேர்ந்த மனோகர் (22) என்பதும், அவர்களுடன் இருந்த இரண்டு பேர் திருநெல்வேலி சந்திப்பு, செல்வி நகரை சேர்ந்த முகேஷ் (32), திருநெல்வேலி டவுண், தெற்கு பஜார் சந்திப் குமார் (27) என்ற வட மாநில வாலிபர்கள் என்பதும் தெரிய வந்தது.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பெங்களூரில் இருந்து திருநெல்வேலிக்கு புகையிலையை காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.
உடனே கயத்தாறு போலீசார் அவர்களை கைது செய்து வழக்கு பதிந்து இச்சம்பவத்தில் மேலும் யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது பற்றி அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.