தலைப்பு செய்திகள்
திருப்பூருக்கு வந்த ரெயிலில் கம்பளி போர்த்திய படி ஆண் சடலத்துடன் வடமாநில தொழிலாளர்கள் இறங்கியதால் பரபரப்பு.

அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து கோவைக்கு வாரம் ஒருமுறை சில்சார் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 8-ம் தேதி சில்சாரில் இருந்து புறப்பட்ட ரெயில் நேற்று திருப்பூருக்கு வந்தது. அப்போது எஸ் 3 பெட்டியிலிருந்து வடமாநிலத்தினர் 2 பேர் இறங்கினர். அவர்கள் முழுமையாக கம்பளி போர்த்தியபடி ஆண் சடலம் ஒன்றை எடுத்து வந்தனர். இதனை கண்காணிப்பு கேமராவில் பார்த்த ரயில்வே போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவர் சில்சார் பகுதியை சேர்ந்த அர்பிந்த்ராய் (30) என்பதும் அவர் பெங்களூருவில் காவலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

அர்பிந்த்ராய் சில்சாரிலிருந்து ஜோலார்பேட்டை வரை டிக்கெட் முன் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் ஜோலார்பேட்டை வந்ததும் உடன் இருந்தவர்கள் அவரை எழுப்பியுள்ளனர். அப்போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வடமாநில தொழிலாளர்கள் இது குறித்து அவரிடம் இருந்த செல்போன் மூலம் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரது உறவினர்கள் திருப்பூரில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருப்பதாகவும் எனவே சடலத்தை திருப்பூர் ரயில் நிலையத்தில் இறக்கி வைக்கும் படியும், தாங்கள் வந்து எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி ரயிலில் வந்த 2 பேர் சடலத்தை எடுத்து வந்துள்ளனர். இதன் பின்னர் சடலத்தை மீட்டு ரயில்வே போலீசார் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெஞ்சுவலி காரணமாக அர்பிந்த் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரயிலில் ஆண் சடலத்துடன் வடமாநில தொழிலாளர்கள் பயணித்தது உடன் வந்த பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
