BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை பிளேக் மேல்நிலைப்பள்ளியில் +2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி தொடங்குவதற்கான தொழில்சார் கருத்துரைப் பயிலரங்கம்.

தஞ்சை மகர்நோன்புச் சாவடி அருகிலுள்ள பிளேக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவ, மாணவிகள் மேல் படிப்பான ( உயர்கல்வி) தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த தொழில்சார் கருத்துரை பயிலரங்கம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த பயிலரங்கத்திற்கு ரோட்டரி சங்கத் தலைவரும், வழக்கறிஞருமான விவியன் அசோக் தலைமை வகித்து, பயிலரங்கத்தை தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வர்ஜல் ஆண்ட்ரோஸ் முன்னிலை வகித்தார்.

ரோட்டரி சங்க பொறுப்பாளர் சந்தானசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக செழியன் ராஜாங்கம் கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் மேல்படிப்பு தொடங்குவதற்கான கருத்துரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தொழில்சார் கருத்துரை வழங்கினார். மருத்துவத்துறை, கட்டிடவியல் துறை, சட்டத்துறை, பொறியியல் துறை உள்ளிட்ட உயர்கல்வி துறை சார்ந்த படிப்புகளை தொடங்குவதற்கான வழிகள் என்னென்ன உள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்த பிறகு போட்டித் தேர்வுகளுக்கு எவ்வாறு தன்னை தயார்படுத்திக் கொள்வது.

போட்டியான உலகத்தில் வெற்றி பெறுவதற்கான ஆங்கில அறிவை எவ்வாறு வளர்த்துக் கொள்வது. மனவலிமை, மனதைரியத்தை தேர்வு நேரத்தில் எவ்வாறு திடம் படுத்திக்கொள்வது. குறிப்பாக வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி, பொருளாதாரம், சுயதொழில் ஆகியவற்றை எவ்வாறு வென்றெடுப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் குறித்து பயிலரங்கத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை கல்லூரி பேராசிரியர் செல்வகுமார், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார், பொருளாளர் நாகராஜன், வழக்கறிஞர் ஸ்ரீராம், அரவிந்த் குமார், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் 100க்கு மேற்பட்ட பிளஸ் 2 மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )