தலைப்பு செய்திகள்
நெல்மணிகளை ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பிசான பருவ நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. குறிப்பாக தாமிரபரணி, மணிமுத்தாறு, ஆற்றுக்கால் உள்ளிட்ட பாசன விவசாயிகள் நெல் அறுவடை பணிகளைத் தொடங்கி உள்ள நிலையில் இதுவரை போதுமான அளவிற்கு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத நிலை உள்ளது.
இதன் காரணமாக, நேற்று (மார்ச் 12) திருநெல்வேலி மாநகராட்சியை ஒட்டியுள்ள பொட்டல், திருவண்ணாதபுரம், படப்பை குறிச்சி, கோட்டூர், பெரியபாளையம், திம்மராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் எனக் கூறி வேளாண்துறை அலுவலர்களிடம் முறையிட்டனர்.
பின்னர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் நெல்லை கொட்டி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விவசாயிகள் தாமிரபரணி ஆற்றில் நெல்லை கொட்டி, நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் மிகக் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய அவல நிலை உள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
