உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம்.

தரங்கம்பாடி,
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டத்திலும் ஏதேனும் ஒரு கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தி, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திட உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை ஆணையரால் ஆணையிடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் ஆகியோர் உத்தரவின் பேரில் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட செம்பனார்கோயில் அருகே நெடுவாசல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மக்கள் குறைதீர் முகாம் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு தலைமையில் நடைபெற்றது.

முகாமிற்கு நெடுவாசல் ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி தனபால், ஒன்றிய கவுன்சிலர் ஷகிலா அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் நெடுவாசல், பட்டாவரம், செருகடமபனூர், கொங்கராயன் மண்டபம், நல்லுச்சேரி, பெருங்குடி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் திருத்தம், பிறந்தநாள் தேதி மாற்றம், செல்போன் எண் மாற்றம், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் மற்றும் அட்டை வகை மாற்றம் ஆகியவை தொடர்பாக 172 மனுக்கள் பெறப்பட்டன.
முகாமில் 157 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு பெற்று பொதுமக்கள் பயனடைந்தனர். மீதமுள்ள 15 மனுக்கள் விசாரணைக்காக நிலுவையில் உள்ளன. 6 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும், அட்டை வகை மாற்றம் தொடர்பான மனுக்களை வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை செய்திட அனுப்பி வைக்கப்பட்டும், மற்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றம் செய்தும் வட்ட வழங்கல் அலுவலர் பாபு ஒப்புதல் ஆணை வழங்கினார்.
இதில் தனி வருவாய் ஆய்வாளர் மரிய ஜோசப் ராஜ், கண்காணிப்பு குழு உறுப்பினர் சகாயராஜ், வட்டப் பொறியாளர் ஐயப்பன், அங்காடி விற்பனையாளர்கள் சிலம்பரசன், கண்ணன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
